கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின்போது செங்காங் குழுத்தொகுதி எம்.பி. ஜேமஸ் லிம் தெரிவித்த சில கருத்துகளுக்கு தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தாங்கள் ஆற்றிய பணிகளை இணைப் பேராசிரியர் சிறுமைப்படுத்திவிட்டார் என்று தொழிற்சங்கவாதிகள் பலர் ஃபேஸ்புக் பதிவுகள் வழியாகவும் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘லியான்ஹ சாவ்பாவ்’ சீன நாளிதழ் ஆகியவற்றுக்கு எழுதி வாசகர் கடிதங்கள் மூலமாகவும் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
குறிப்பாக, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் வருமானம் தொடர்பான விவகாரத்தில் தங்களது கண்ணோட்டங்களைக் குறிப்பிட்டபோது திரு லிம் பயன்படுத்திய சொற்கள் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
கடந்த வியாழக்கிழமையன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, படிப்படியான சம்பள உயர்வு முறையால் கடந்த ஆண்டுகளில் 80,000 துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள், நிலவனப்பு ஊழியர்களின் ஊதியம் 30% கூடியுள்ளதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளரும் சுகாதார மூத்த துணை அமைச்சருமான கோ போ கூன் தெரிவித்தார்.
அத்துடன், முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து பணி ஆற்றுவதன் அவசியத்தை உணர்ந்துள்ள மூத்த தொழிற்சங்கவாதிகள் போன்ற உரிய பங்காளிகளுடான பேச்சுவார்த்தை அணுகுமுறையும் மிக முக்கியம் என்று டாக்டர் கோ குறிப்பிட்டார்.
அதன்பின் பேசிய பேராசிரியர் லிம், தொழிலாளர் சங்கத் தலைவர்களின் கண்ணோட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது ‘பாமர மக்களுக்குரிய அறிவும் நம்பிக்கைகளும்’ என்ற சொற்களைப் பயன்படுத்தி இருந்தார்.
இதையடுத்து, “பேராசிரியர் லிம்மின் கருத்துகள் வருத்தம் தருவதாக உள்ளன,” என்று கட்டடக் கட்டுமான, மரத் தொழில்கள் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு நசொர்தின் பி. முகம்மது ஹாஷிம் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு எழுதிய வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“எங்களது இத்தனை ஆண்டுகாலக் கடும் உழைப்பைச் சிறுமைப்படுத்துவதாக அவரது கருத்துகள் அமைந்துள்ளன,” என்று திரு ஹாஷிம் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் லிம்மின் தொனியும் அவர் பயன்படுத்திய சொற்களும் ஆயிரக்கணக்கான தொழிற்சங்கத் தலைவர்களை அவமதிப்பதாக உள்ளது என்று உலோகத் தொழிலக ஊழியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் லிம் டெக் சுவான், ‘சாவ்பாவ்’ இதழுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.
பாதுகாவல் அதிகாரிகளின் நிலையை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வந்துள்ளதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் குறிப்பிட்ட பாதுகாவல் ஊழியர் சங்கம், “அதில் எதுவும் சாதாரணமானதல்ல என்பது உறுதி. அவை வெறும் ஏட்டுக் கோட்பாடுகளும் அல்ல. நாங்கள் செய்வதைத்தான் சொல்கிறோம், சொல்வதைத்தான் செய்கிறோம்,” என்றும் தெரிவித்து இருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று ஒரு ஃபேஸ்புக் பதிவின் மூலம் விளக்கம் அளித்த பேராசிரியர் லிம், பரிவு உணர்வுமிக்க பிரதிநிதித்துவம், முதலாளிகளுடன் பேசும் திறன், ஊழியர்களின் உரிமைகளுக்காகக் கடுமையாக உழைப்பது எனப் பல அம்சங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தாம் மரியாதை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், நேற்றைய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வாசகர் கடிதப் பக்கத்திலும் அவர் அதை மீண்டும் வெளிப்படுத்தி இருந்தார்.