இறுதிச்சடங்கு சேவைகளைக் கையாளும் நிறுவனங்கள் இனி கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
சென்ற ஜனவரி மாதம் மண்டாய் தகனச்சாலையில் உடல்கள் மாற்றி எரியூட்டப்பட்ட சம்பவம் குறித்து எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி இறந்தவர்களின் உடல்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்லும் வாகனங்கள் சுத்தமாக இருப்பதோடு சரியான முறையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனம் கிளம்புவதற்கு முன்பு வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி பாதுகாப்பாக வாகனத்துடன் பொருத்தப்பட்டிருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இறந்தவர்களின் கண்ணியத்தைக் கட்டிக்காக்கும் வகையிலும் உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் தேவை கருதியும் நன்கு செயல்பட வேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் ஈமச்சடங்குச் சேவை நிறுவனங்களின் சங்கமும் தெரிவித்தன.
நேற்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டி விதிமுறைகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட விதிமுறைகளுடன் தொடர்புடையவை.
விதிமுறைகளின் மற்ற அம்சங்கள், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு முறையான நடைமுறையை நிறுவனங்கள் கொண்டிருக்கவேண்டும். அத்துடன் உடல்களைப் பதனப்படுத்தும் அறையில் அளவுக்கு அதிகமான உடல்கள் வைக்கப்படாமல் இருப்பதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும். நோய்ப்பரவல் அபாயத்தைக் குறைக்கும் வகையிலான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம், ‘ஹார்மனி ஃபியூனரல் கேர்’ என்னும் ஈமச்சடங்குச் சேவை வழங்கும் நிறுவனம் விதிமுறைகளின்படி போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அத்துடன் இறந்தவர்களின் உடல்களை முறையாகக் கையாளவில்லை. அதனையடுத்து அந்த நிறுவனம் அரசாங்கத்தின் ஈமச்சடங்கு வசதிகளைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
உடலைப் பதப்படுத்தும் வசதியுள்ள ஈமச்சடங்கு நிலையங்கள் உரிய ஆவணங்களை வைத்திருப்பதையும் சுற்றுப்புற தூய்மைத் தரத்தைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம், இறுதிச்சடங்கின்போது உடல்கள் மாற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையது. இது சிங்கப்பூரில் நடந்த முதல் சம்பவம்.
கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலுக்குப் பதிலாக திரு கீயின் உடல் எரியூட்டப்பட்டுவிட்டதாக ஹார்மனி ஃபியூனரல் கேர் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அந்தச் செய்தி குறிப்பிட்டது.
தாவோயிச சமயத்தைச் சேர்ந்த 82 வயது திரு கீயின் உடலுக்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தது திரு கீயின் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியது.
தாவோயிச சமய வழக்கப்படி, இறந்தவரின் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் எரியூட்டப்படும். அதனைக்கூட திரு கீக்கு செய்ய முடியாமல் போனதாக அவரது மருமகன் திரு ஹோ மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார். இன்னொருவரான கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 70 வயது ஆடவரின் உடல் மாற்றி எரியூட்டப்பட்டது.
இந்த இரண்டு பேரின் உடல்களும் ‘செஞ்சுரி புரோடக்ட்ஸ்’ நிறுவனத்தில் ஒரே பதனப்படுத்தப்படும் அறையில் வைக்கப்பட்டிருந்தன. உடல் பதனப்படுத்தப்படும் வசதிகளைக் கொண்டிருந்த அந்த நிறுவனம், பதனப்படுத்தப்படும் அறையில் சரியான முறையில் எந்த ஒரு ஆவணப் பதிவுகளையும் கொண்டிருக்கவில்லை. ‘செஞ்சுரி புராடக்ட்ஸ்’ நிறுவனம் குற்றவியல் விசாரணையை எதிர்நோக்குகிறது.
தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி இறுதிச்சடங்கு, எரியூட்டல், இறுதிச்சடங்கு வசதிகளைப் பெறுதல் போன்றவற்றுக்கு தங்களை வாரியத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். நிறுவன ஒப்பந்ததாரர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுக்கட்டணம் இலவசம். புதிய விதிமுறைகள் குறித்து இறுதிச்சடங்கு நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.