‘மெடிஷீல்ட் லைஃப்’ தவணைக் கட்டணம் உயர்த்தப்படுவதை தாமதித்தால், வழங்கீட்டுத் தொகை அதிகரிக்கும்போது, பின்னர் அதற்கேற்ப தவணைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட வேண்டியதிருக்கும் என மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று (அக்டோபர் 19) மாலை குறிப்பிட்டார்.
இந்த கட்டாய தேசிய சுகாதார காப்புறுதித் திட்டத்துக்கான தவணைக் கட்டணங்கள், தற்போதைய மற்றும் எதிர்கால கடப்பாடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற அவர், அதன் காரணமாகவே, தற்போதைய வழங்கீடுகளைவிட மொத்த தவணைக் கட்டணம் அதிகமாக உள்ளது என்றார்.
கொவிட்-19 சூழலின் தாக்கம் பற்றி தெரிந்திருந்தாலும் மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டம் நீடித்திருக்க வேண்டிய தேவையை சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்வர் என நம்பிக்கை தெரிவித்தார் திரு கோ.
மெடிஷீல்ட் லைஃப் திட்டம் அடுத்த ஆண்டில் சீரமைக்கப்படும் என கடந்த மாதம் சுகாதார அமைச்சு அறிவித்தது. தவணைக் கட்டணங்கள் மூன்றில் ஒரு பங்கு வரை உயரக்கூடும்.
ஒவ்வொரு ஆண்டுக்குமான வழங்கீட்டுத் தொகை $100,000 முதல் $150,000 வரை அதிகரிப்பு, உயர்ந்துவரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பலன்களின் தொடர்பில் இந்த தவணைக் கட்டண அதிகரிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாண்டுகளில், அடுத்த ஆண்டுதான் முதன் முறையாக மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதிகரிக்கும் தவணைக் கட்டணத்தைச் சரிக்கட்ட, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கம் $360 மில்லியன் கொவிட்-19 மானியம் வழங்கும்.