திரையரங்கில் படம் பார்க்க விரும்புவோர், அக்டோபர் 26ஆம் தேதி முதல் தங்களின் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது தங்களிடம் உள்ள ‘டிரேஸ்டுகெதர்’ கருவியைப் பயன்படுத்த வேண்டும். அதைக் கொண்டு திரையரங்குக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டாய நடவடிக்கை அனைத்து திரையரங்குகளிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
இதை நடைமுறைப்படுத்த திரையரங்க நிறுவனங்களுக்கு நவம்பர் 16 வரை அவகாசமும் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்த நடவடிக்கை முழுமையாக நடப்புக்கு வந்த பிறகு, திரைப்படம் பார்க்கச் செல்லும் அனைவரும் கட்டாயமாக ‘டிரேஸ்டுகெதர்’ பயன்படுத்தியாக வேண்டும்.
இதன்படி, திரையரங்குக்குச் செல்வோர் தங்களின் கைபேசியைக் கொண்டு ‘சேஃப்எண்ட்ரி’ எனப்படும் பாதுகாப்பான வருகைப் பதிவுமுறை செய்யவோ ‘சிங்பாஸ்’ செயலியைப் பயன்படுத்தவோ முடியாது. அவர்களின் அடையாள அட்டையின் பட்டைக் குறியையும் பயன்படுத்த இயலாது.
புதிய நடைமுறைக்கு மக்கள் பழகிக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறைக்காக புதிய சாதனங்களைத் திரையரங்க நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்றும் பேச்சாளர் கூறினார்.
இத்தகைய கட்டாய ‘டிரேஸ்டுகெதர்’ வருகைப் பதிவுமுறையை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தும் முதல் இடங்களில் திரையரங்குகளும் ஒன்றாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இந்த நடைமுறை ஹோட்டல்கள், உணவு மற்றும் பானக் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஒரு சில அலுவலகங்கள் ஆகியவற்றிலும் அமல்படுத்தப்படலாம் என்று சென்ற மாதம் தெரிவிக்கப்பட்டது.