அங் மோ கியோவில் உள்ள தொழிற்சாலை அலுவலக இடம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
இதில் சூதாட்டம் தொடர்பான குற்றங்களுக்காக 21 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட 11 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அங் மோ கியோ ஸ்திரீட் 64ல் அமைந்துள்ள அந்த அலுவலக இடம், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கான பதுங்குமிடமாக செயல்பட்டு வந்ததாக போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த அலுவலக இடத்தை 32 வயது ஆடவர் ஒருவர் இயக்கி வந்ததாகவும் 21 வயது, 38 வயதில் உள்ள மற்ற இரு ஆடவர்கள் அதன் சட்டவிரோத செயல்பாடுகளுக்குத் துணைநின்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சூதாட்ட நடவடிக்கைகளில் வேறு எட்டு ஆடவர்களும் பங்கேற்றது கண்டறியப்பட்டுள்ளதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், இரு மேசைகள், 20 நாற்காலிகள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான போலிஸ் அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் எச்சரித்துள்ளது.