அறிவார்ந்த தேச இலக்கை நோக்கி பயணம் செய்துவரும் சிங்கப்பூரில் அனைவரையும் உள்ளடக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டை மறவாது சிங்பாஸ் கைபேசி செயலியை உருவாக்கிய குழுவுக்கு வருடாந்திர பொதுத் துறை உருமாற்ற விருதுகளில் சேவை விநியோக உன்னத விருது வழங்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சிங்பாஸ் தளத்தை மேம்படுத்திய பெருமை இக்குழுவைச் சேரும். சிங்பாஸ் கைபேசி செயலி திரை வாசிப்பான், குரல் வழி உத்தரவு போன்ற அம்சங்களைப் பயன்படுத்தும். இதனால் பார்வையில் குறைஉள்ளவர்களும் இச்செயலியைப் பயன்படுத்தலாம் என்று அரசாங்க தொழில்நுட்ப முகவையின் பயனீட்டாளர் அனுபவ வடிவமைப்பாளர் திரு சியூ கியோ ஹுவீ தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, திறன்பேசி இல்லாதவர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மறைச்சொல் மூலம் சிங்பாஸ் தளத்தைப் பயன்படுத்தலாம்.
இந்த ஒருமுறை மறைச்சொல் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பிவைக்கப்படும். இவ்வாண்டு இறுதிக்குள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும் ஒருமுறை மறைச்சொற்களைப் பெற முடியும். இது குறிப்பாக, திறன்பேசி இல்லாத முதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செயலி 2018ஆம் ஆண்டு தொடங்கியது. விரல்ரேகை போன்ற அடையாளம் காணும் முறையை செயலி பயன்படுத்துகிறது.
சிங்பாஸ் தளத்தைப் பயன்படுத்தி பல்வேறு அரசாங்க அமைப்புகள் தொடர்பான பரிவர்த்தனைகள் மட்டுமின்றி வங்கிகள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் போன்ற தனியார் துறை தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.
சிங்பாஸ் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முன்பு பயனீட்டாளர்கள் தங்கள் சிங்பாஸ் மறைச்சொல்லை நினைவில் வைத்திருக்க வேண்டும். அதை மறந்தால் புதிய மறைச்சொல்லுக்குக் கோரிக்கை விடுக்க வேண்டும். புதிய மறைச்சொல் கேட்டு ஒரு மாதத்துக்கு 150,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு பொதுத் துறை உருமாற்ற விருது நிகழ்ச்சியில் 12 பிரிவுகளின்கீழ் 80 விருதுகள் வழங்கப்பட்டன.