சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங்கின் முன்னாள் பணிப்பெண் குமாரி பார்தியின் வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் பேச பாட்டாளிக் கட்சி புதிய கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பாட்டாளிக் கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம்மின் தனிப்பட்ட உறுப்பினர் விண்ணப்பத்திற்கு அக்கட்சியின் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு ஆதரவு தெரிவித்திருப்பதாக கட்சியின் ஃபேஸ்புக் செய்தி தெரிவித்தது.
“சிங்கப்பூரின் நீதித் துறை அடிப்படையாக, நேர்மை, எளிதில் அணுகக்கூடிய தன்மை, சுதந்திரம் என்பதை இந்த நாடாளுமன்றம் உறுதிபடுத்தியது.“வசதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற எந்த வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய நீதித் துறையை மேம்படுத்தவும், நீதித் துறையை மறுஆய்வு செய்வது உட்பட அதிலுள்ள குறைபாடுகளை அங்கீகரித்து அவற்றை சரிசெய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்,” என்பது அந்த விண்ணப்பம்.
லியூ குடும்பத்திடமிருந்து, $34,000 மதிப்புள்ள பொருட்களை திருடியதாக குமாரி பார்திக்கு கடந்த ஆண்டு, இரண்டு ஆண்டு இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குடும்பத்தாரின் புகாரின் பேரில் தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்கில் தீர்ப்பு பணிப்பெண்ணுக்குச் சாதகமாக அமைந்தது. குற்றச்சாட்டுகளிலிருந்து குமாரி பார்தியை சென்ற மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.
சென்ற மாதம் திருவாட்டி லிம் தாக்கல் செய்த ஒத்திவைப்புத் தீர்மானம் அக்டோபர் 5ஆம் தேதி கூடிய மன்றத்தின் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒத்திவைப்புத் தீர்மானத்தின் கீழ், நாடாளுமன்ற அமர்வின் இறுதியில் உறுப்பினர் 20 நிமிடங்கள் பேசலாம். தொடர்ந்து அதற்கு 10 நிமிடங்கள் மறுமொழி வழங்கப்படும். தனிப்பட்ட விண்ணப்பத் தாக்கல் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
இதற்கிடையே, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், குமாரி பார்த்தி லியானி வழக்கு தொடர்பில் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் அமைச்சுநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறார்.