சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு அதன் அன்றாட முதற்கட்ட அறிவிப்பில் தெரிவித்தது. கிருமிப் பரவல் தொடங்கியது முதல் ஆக அண்மைய நிலவரத்தை இரு கட்டங்களாக அமைச்சு அறிவித்து வருகிறது. நண்பகல் வரையிலான நிலவரத்தை அது தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவிப்பதோடு அதற்குப் பிந்திய விவரங்களை இரவில் வெளியிட்டு வருகிறது.
புதிய 12 தொற்றாளர்களும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் இங்கு வந்தது முதலே கட்டாய இல்லத் தனிமையில் வைக்கப்பட்டவர்கள் என்றும் அமைச்சு குறிப்பிட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஈரிலக்கத்தில் பதிவாகி இருப்பது இம்மாதத்தில் இரண்டாவது சம்பவமாகும்.
அக்டோபர் 1ஆம் தேதி அந்த எண்ணிக்கை 15 என அறிவிக்கப்பட்டது. உள்ளூரில் புதிதாக எவருக்கும் கிருமிப் பாதிப்பு ஏற்படவில்லை. புதிய 12 பேரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை பதிவான கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 57,933 ஆகும்.