வேலைகளுக்கு ஏற்ற திறனுடன் ஊழியர்கள் இருப்பதையும் நடுவில் வேறு வாழ்க்கைத்தொழிலுக்கு மாறுவோர், தேவைப்படும் தேர்ச்சிகளுடன் தொடர்ந்து வேலைச் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான நிலையில் இருந்து வருவதையும் உறுதிப்படுத்துவதற்காக ஒரு புதிய வழிகாட்டித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் திட்டத்தின்படி, வேலையிடத்தில் ஊழியர்கள் பல ஆற்றல்களையும் திறமைகளையும் கற்றுக்கொள்ள ஏதுவாக பல ஏற்பாடுகளை நடப்புக்குக் கொண்டு வரும் நிறுவனங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கவிருக்கிறது.
பயிற்சி மற்றும் பெரியவர் கல்வித் துறையை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெரியோர் கற்றல் பயிலகம் அந்த ஐந்தாண்டுத் திட்டத்தை நேற்று தொடங்கியது. அதன்படி இந்த ஆண்டில் மூன்றாவது தேசிய உன்னத வேலையிட கற்றல் நிலையம் திறக்கப்படும். அந்த நிலையம் நிறுவனங்களில் ஊழியர்கள் முன்னதாகவே பல தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள உதவும்.
வேலை-குழு ஆற்றல்களை உருவாக்கியும் அந்த நிலையம் ஆதரவு அளிக்கும். அது சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி அந்த நிறுவனங்கள் கற்றல் நடைமுறைகளை வேலையிடங்களில் ஒருங்கிணைக்க கைகொடுக்கும். நிறுவனங்களின் மீள்திறன் பலமடையவும் அது ஆதரவு அளிக்கும்.
முதியோர் கற்றல் பயிலகம் ஆயுள்காலம் மற்றும் வேலையிட கற்றல் தொடர்பான ஆய்வுகளை நடத்தி மின்னிலக்கப் புத்தாக்கத்தில் அவற்றின் தாக்கத்தைத் தீர்மானிக்கும்.
கற்றலிலும் வேலை நியமனங்களிலும் உலகமயம் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கு என்பதையும் அது ஆராயும். கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று புதிய வழிகாட்டித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
“அடுத்த ஐந்தாண்டிற்குத் துடிப்புமிக்கத் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. பயிற்சி மற்றும் முதியோர் கல்வித்துறை உருமாற்றம் அடைவதற்குத் தலைமைதாங்கி இந்தப் பயிலகம் அடுத்த சுற்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.