கொவிட்-19 காரணமாக முன்பைவிட அதிகமான மக்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறார்கள். இந்தச் சூழலில் இங்கு செயல்படும் நிறுவனங்கள், கணிசமான அளவிற்கு அதிகமாக இணையப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. சிஸ்கோ என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் இது தெரியவருகிறது. அந்த ஆய்வு ஜூன் 16 முதல் செப்டம்பர் 4 வரை 21 நாடுகளைச் சேர்ந்த 3,200 நிறுவனங்களை உள்ளடக்கி நடத்தப்பட்டது.
சிங்கப்பூரில் செயல்படும் YouGov என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்தியது.அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆய்வில் உள்ளடக்கப்பட்டன. வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைப் பொறுத்தவரை ஆசியப் பசிபிக்கிலேயே சிங்கப்பூரில்தான் பெரும் மாற்றம் ஏற்பட்டது. சிங்கப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களில் 10ல் சுமார் ஆறு நிறுவனங்கள் கொவிட்-19 தொடங்கியது முதல் இணைய மிரட்டல்கள் குறைந்தபட்சம் 25 விழுக்காடு அதிகரித்து இருப்ப தாகத் தெரிவித்துள்ளன.
இணையத்தில் மோசடி தளங்களுக்கான இணைப்புகள், ரகசியமாக ஒருவரின் தகவல்களைப் பெற இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் முதலானவை இத்தகைய மிரட்டல்களில் அடங்கும். என்றாலும் இணைய மிரட்டல்களைச் சமாளிக்கவும் தொலைதூரத்தில் இருந்து வேலை பார்க்க ஏதுவாக மாறிக்கொள்ளவும் தேவையான அளவிற்கு தாங்கள் மிகவும் ஆயத்தநிலையில் இருப்பதாக 42 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்தன. சிங்கப்பூரில் ஊழியர்களில் பாதி பேருக்கும் அதிகமானவர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கின்ற ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தி இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 59 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.
இந்த அளவுக்கு வேறு எந்த ஆசியப் பசிபிக் நாட்டிலும் அதிகரிப்பு இல்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் பாதுகாப்பு சாதனங்களின் கட்டுப்பாட்டையும் கொள்கைகளையும் நிலைநாட்டி வருவதுதான் இணையப் பாதுகாப்பைப் பொறுத்தவரைமிக முக்கிய சவாலாக உருவெடுத்து இருப்பதாக 58 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன.