கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, நிறுவனங்கள் மீண்டும் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அடிப்படை வேலையிடப் பாதுகாப்பு அம்சங்களையும் நினைவில் கொள்வது அவசியம் என்றார் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.
இவ்வாண்டு ஜூன் 2 முதல் இதுவரை பத்து வேலையிட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவற்றில் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு பதிவானவை நான்கு. நான்குமே அதிக அபாயகரமான பணிகள் தொடர்பானவை என்றார்.
வேலையிட உயிரிழப்புகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இல்லாவிட்டாலும், வெகுநாட்களாக பணிகளில் ஈடுபடாத ஊழியர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வளவாக பரிச்சயமாகி இருக்காது என்ற அக்கறை நிலவுவதாக திரு ஸாக்கி குறிப்பிட்டார். இழந்த வேலை நேரத்திற்கு ஈடுகட்ட வேண்டும் என்று நிறுவனங்கள் அவசரப்படலாம். ஆனால் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை முதலாளிகள் மீண்டும் பார்வையிட வேண்டும் என்றும் ஊழியர்கள் அவற்றைப் பழகிக்கொள்ளவும் தேவைப்பட்டால் அவர்களுக்கு மறுபயிற்சி அளிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தினார் அமைச்சர்.
‘சைனிஸ் கார்டன்’ பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டுமானத் தளத்திற்குச் சென்றிருந்த திரு ஸாக்கி இவ்வாறு பேசியிருந்தார். அங்கு நடந்துகொண்டிருந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான பணிகள், கிருமி முறியடிப்புக் காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக திட்டத்துக்குப் பொறுப்பான நிறுவனமான ‘குவான் எய்க் ஹோங் கன்ஸ்ட்ரக்ஷன்’, பாதுகாப்பு இடைவெளியைக் கண்காணிக்கும் கருவியைப் பயன்படுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கருவிகளை வைத்திருக்கும் ஊழியர்கள், பாதுகாப்பு இடைவெளியை மீறினால் அவர்களது கருவி ஒலி எழுப்பும். கருவியோடு இணைக்கப்பட்ட செயலி வழி மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இத்துடன் நிறுவனத்தின் 220 ஊழியர்களும் வெவ்வேறு வேலையிடப் பகுதிகளில் பணியாற்றுவர். ஒரு பகுதியில் பணியாற்றுபவர் வேறு பகுதியில் உள்ளவருடன் பழக அனுமதி இல்லை.
திட்டமிட்ட காலத்திற்குள் வேலையை முடிப்பதில் ஓர் அவசரநிலை இருந்தாலும், பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக நிறுவனத்தின் பொது மேலாளர் ஃபேபியன் லொய் தெரிவித்தார்.
கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு தீவிரமடையும் என்று அவர் கூறினார்.