கொரோனா கிருமித்தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து தொடர்பிலான அண்மைய முரண்பட்ட கண்டுபிடிப்புகளை தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் (என்சிஐடி) தீவிரமாக ஆராய்ந்து வந்தாலும் கொவிட்-19 நோயாளிகளுக்குத் தொடர்ந்து அம்மருந்து ஒரு சிகிச்சை முறையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சென்ற வாரம் அதன் ‘சோலிடேரிட்டி’ சோதனையின் இடைக்கால முடிவுகளை வெளியிட்டிருந்தது. கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் எவ்வளவு காலம் இருப்பார்கள், அவர்கள் பிழைப்பது எந்த அளவு சாத்தியம் ஆகியவற்றின் தொடர்பில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அமெரிக்க தேசிய சுகாதாரக் கழகங்களின் கொவிட்-19 சிகிச்சைமுறை சோதனை முடிவுகளையும் என்சிஐடியின் கொவிட்-19 சிகிச்சைமுறை பணிக்குழு, ஆராய்ந்து வருகிறது. மருத்துவச் சோதனைகள் தவிர வேறு காரணங்களுக்காகவும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தைப் பயன்படுத்த, சுகாதார அறிவியல் ஆணையம் ஜூன் மாதத்தில் நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கி இருந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்போதைய சிகிச்சை முறையில் மாற்றம் இல்லை. குறைந்த பிராணவாயு செறிவு நிலை, கூடுதல் பிராணவாயு தேவைப்படும் நிலை போன்ற நோயாளிகளுக்குத் தொற்றுநோய் நிபுணர்கள் ‘ரெம்டெசிவிர்’ மருந்தைச் செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் சீராக இல்லை என்றும் வேறு ஆய்வுகள் ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் பலன்களை உறுதிசெய்துள்ளன என்றும் மருந்தை உருவாக்கிய ஜிலிட் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், இது நம்பகமான முடிவே என்றார் உலக சுகாதார நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட புள்ளிவிவர நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பெட்டோ.