நிறுவனங்கள் வளரவும் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உலக நாடுகளுடனான ஒத்துழைப்பை சிங்கப்பூர் தொடரும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்து இருக்கிறார்.
கொவிட்-19 நெருக்கடி பொருளியல் மந்தநிலையை ஏற்படுத்தி இருந்தாலும், தடையற்ற வர்த்தக உடன்பாடுகள், மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடுகள் போன்ற வழிகளில் அனைத்துலக ஒத்துழைப்பை நாடும் உத்தியை சிங்கப்பூர் விடாப்பிடியாகக் கைக்கொள்ள வேண்டும் என்று திரு ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
“நாம் சவால்மிக்கதொரு பொருளியல் சூழலில் இருக்கிறோம் என்பது தெள்ளத்தெளிவு. இத்தகைய சூழலில் இருந்து நாம் எப்படி வெளியேறப் போகிறோம் என்பது நமது செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்,” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் தொழில் சம்மேளனத்தின் தடையற்ற வர்த்தக உடன்பாட்டு நாளில் பங்கேற்று, மெய்நிகர் முறையில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
கொரோனா நெருக்கடியைக் காரணமாகச் சொல்லி, தடையற்ற வர்த்தகத்தில் இருந்தும் வெளிப்படைத் தன்மையுடைய நாடாக இருப்பதில் இருந்தும் பின்வாங்குவது குறுகிய கால நோக்கில் சரியான செயலாகத் தோன்றக்கூடும் என்றார் அவர்.
“ஆனால், நீண்டகால நோக்கில் பார்த்தால், அப்படிச் செய்வது நம்முடைய வளர்ச்சி வாய்ப்புகளையும் நம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் பெரிதும் பாதித்துவிடும். சிறிய நாடானாலும் பெரிய நாடானாலும் இதுதான் உண்மை,” என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு ஈஸ்வரன் கூறினார்.
புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த இன்னொரு நேர்காணலின்போது, வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் பல நாடுகளுடன் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
“சிங்கப்பூரில் தொழில் செய்ய விரும்பும் பல பங்காளிகளை நாம் கண்டு வருகிறோம். சிலர் தங்களது வட்டாரத் தலைமையகங்களையும் இங்கு அமைத்துள்ளனர். நம்முடைய தடையற்ற வர்த்தக உடன்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவுகளால் இது சாத்தியமானது,” என்றார் அமைச்சர்.
மின்னிலக்கப் பொருளியலை மையமாகக் கொண்ட உடன்பாடுகள் உள்ளிட்ட இருதரப்பு உடன்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேவேளையில், வட்டார முழுமையான பொருளியல் பங்காளித்துவம், பொருட்கள் தொடர்பான ஆசியான் ஒப்பந்தம் ஆகியவற்றிலும் சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது. தற்போதுள்ள உலக வர்த்தக சங்கிலித் தொடரை வர்த்தகங்கள் கிள்ளுக்கீரையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. புதிய சந்தைகளிலும் பன்முக சந்தைகளிலும் வாய்ப்புகளைப் பெற நாம் அனைத்துலக மயமாக வேண்டும் என்று திரு எஸ். ஈஸ்வரன் கூறினார்.