கடல்துறையில் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வரும் மாதங்களில் மொத்தம் 1,000 பயிற்சி மற்றும் வேலையிட பயிற்சி வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
தானியக்க இயந்திரங்கள், மின்னிலக்க உருமாற்றம், கப்பல் செயல்முறைகள், கடல்துறை மேலாண்மை ஆகிய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்க இருக்கின்றன.
சிங்கப்பூர் கடல்துறைக் கழகத்தின் 10வது கருத்தரங்கில் நேற்று பேசிய போக்குவரத்து மற்றும் வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், அந்த வாய்ப்புகள் இந்தத் தொழில்துறையில் நிலவும் தேர்ச்சித் தேவைகளைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
பிறகு இதர துறைகளில் வேலையில் சேர விரும்புவோருக்கும் இந்த வாய்ப்புகள் பலன் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் கடல்துறை மீள்திறனோடு மட்டுமின்றி வளர்ந்து வரும் துறையாகவும் இருக்கிறது. இந்தத் துறையை இன்னும் வளர்த்து வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவது எப்படி என்பதுதான் சவால் என்றார் அமைச்சர்.
வேலைகளை உருவாக்குவது ஒருபுறம் இருக்க, அந்த வேலைகளுக்குத் தோதாக மக்களின் தேர்ச்சிகளை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றாரவர்.
இதனிடையே, எஸ்ஜி யுனைட்டெட் வேலை தேர்ச்சி இயக்கத்தின் கீழ், பல அமைப்புகளோடும் சேர்ந்து புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையமும் இதர பல அமைப்புகளும் கூட்டறிக்கையில் நேற்று தெரிவித்தன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த அந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர், பல மாற்றங்களும் உலகில் இடம்பெற்று வருவதால் அவற்றுக்குத் தோதாக நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
சிங்கப்பூர் உலகின் ஆகப் பெரிய கப்பல் போக்குவரத்து மையமாகவும் முக்கியமான கடல்துறை மையமாகவும் இருப்பதால் கரிம அளவைக் குறைக்கும் இலக்கை நிறைவேற்ற சிங்கப்பூர் தொடர்ந்து பாடுபட்டு பருவநிலை பாதிப்புகளைக் குறைக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.