சிங்கப்பூரில் அறப்பணி அமைப்புகளுக்கான நன்கொடை 2018ல் $2.9 பில்லியனாக இருந்தது. இது 10 ஆண்டுகளில் ஆக அதிகமானதாகும். இருந்தாலும் கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டில் நன்கொடைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறப்பணிகளுக்கான நன்கொடை 2017ல் $2.7 பில்லியனாக இருந்தது. அது 2018ல் 8% கூடி $2.9 பில்லியனாகக் கூடியது என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறப்பணி ஆணையர் 2019 ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2018ல் பெறப்பட்ட நன்கொடை தொகை 10 ஆண்டுகளிலேயே ஆக அதிகமானது என்றும் 2009ல் திரண்ட $1.8 பில்லியனைவிட அது சுமார் 60 விழுக்காடு அதிகம் என்றும் ஆணையர் ஆங் ஹாக் செங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கல்வி, சமயம், சமூகம், நல்வாழ்வுத் துறைகளில் நன்கொடைகள் பெரிதும் அதிகரித்தன. இதனால் 2018ல் சாதனை அளவுக்கு கொடை திரண்டது என்று டாக்டர் ஆங் விளக்கினார்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு டிசம்பர் நிலவரப்படி பதிவு பெற்ற 2,281 அறப்பணி அமைப்புகள் செயல்பட்டன என்பது ஆணையரின் அறிக்கை மூலம் தெரியவருகிறது.
2019ல் புதிதாக 21 அமைப்புகள் மட்டுமே பதியப்பட்டன. இந்த எண்ணிக்கை 2018ல் 40 ஆகவும் 2017ல் 39 ஆகவும் இருந்தது.