அனைத்துலக கலாசாரம், உலகளாவிய விவகாரங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு செயல்படும் திறனைச் சோதித்துப் பார்த்த அனைத்துலகத் தேர்வு ஒன்றில் சிங்கப்பூரின் 15 வயது மாணவர்களே முதலிடத்தில் வந்தனர்.
2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இத்தேர்வின் முடிவுகளை பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி நிறுவனம் (ஓஇசிடி) நேற்று அறிவித்தது.
‘பிசா’ எனப்படும் அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக இடம்பெற்ற ‘உலகளாவிய திறன்’ தேர்வில் சிங்கப்பூர் மாணவர்களுக்குச் சராசரியாக 576 மதிப்பெண்கள் கிடைத்தன.
இரண்டாவது நிலையில் வந்த கனடிய மாணவர்களுக்கு 554 மதிப்பெண்களும் மூன்றாவது நிலையில் வந்த ஹாங்காங் மாணவர்களுக்கு 542 மதிப்பெண்களும் கிடைத்திருந்தன.
இந்தத் தேர்வில் பங்கேற்ற சிங்கப்பூர் மாணவர்களில் 46 விழுக்காட்டினர், மிகச் சிறந்த உலகளாவிய திறன் தேர்ச்சி நிலை என்று கருதப்படும் நான்கு அல்லது ஐந்தாம் நிலையைப் பெற்றிருந்தனர்.
மதிப்பீட்டில் பங்கேற்ற 27 நாடுகளின் கல்வி அமைப்புகளில் சராசரியாக 14 விழுக்காட்டினர் நான்காம், ஐந்தாம் நிலைகளில் தேறியிருந்தனர்.
வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து பகுப்பாய்வு செய்வது, தகவலை மதிப்பிட்டு வேறுபடுத்திக் காண்பது போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் அதிகத் திறன் பெற்றுள்ளனர் என்பதை இந்த முடிவுகள் காட்டுவதாக கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.
2018 ‘பிசா’ ஆய்வு
இதற்கிடையே உலகளாவிய விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் மாணவர்கள் அதிகம் அறிந்திருந்தாலும் உலக சச்சரவுகள் மற்றும் பொருளியல் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை என்று ‘2018 பிசா ஆய்வு’ தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 6,670 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பத்தில் எட்டு சிங்கப்பூர் மாணவர்கள், தங்களால் உலகளாவிய பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற விவகாரங்கள் குறித்து நம்பிக்கையுடன் விளக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இது ஓஇசிடியின் சராசரியான 6, 7 மாணவர்களைவிட அதிகமே.
இருப்பினும், அனைத்துலக ரீதியில் நடந்து வரும் மோதல்கள், கொள்ளைநோய்கள், பொருளியல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் சிங்கப்பூர் மாணவர்களிடம் அந்த அளவு தன்னம்பிக்கை இல்லை.
உதாரணத்திற்கு, துணிகளின் விலையையும் அத்துணிகளைச் செய்யும் நாடுகளில் உள்ள வேலைச் சூழல்களையும் 50 விழுக்காட்டினரால் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது. இது ஓஇசிடியின் சராசரி விகிதமான 58 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவு.
புதிய சூழல்கள் அல்லது சவால்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வது தொடர்பில் 50 விழுக்காட்டினர் மட்டுமே முடியும் என்றனர். ஓஇசிடியின் சராசரி விகிதம் 59%.
புதிய, சவால்மிக்க சூழல்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மை பெற்ற மாணவர்களிடம் கூடுதல் மீள்திறன் அமைந்திருக்கும் என்று கல்வி அமைச்சு ‘பிசா 2018’ ஆய்வை மேற்கோள் காட்டியது. மாணவர்கள் பரந்த முறையில் கல்வி கற்பதைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.