கற்றலில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் உதவி கல்வியாளர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் வாழ்க்கைத் தொழில் வளர்ச்சிக்கான கூடுதல் வழிகள் இருக்கப்போகின்றன.
இவர்களது முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கற்றல் மற்றும் நடத்தை தொடர்பான ஆதரவை வழங்குவதற்காக உதவி கல்வியாளர்களுக்கான உயர் பதவிகள் உருவாக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. இத்தகையோர், வழக்கமான பள்ளிகளில் குறைந்தளவு சிறப்புத் தேவை உடைய மாணவர்களுடன் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள். 2022ல் உதவி கல்வியாளர் திட்டம் இரு தடங்களாகப் பிரியும்போது உதவி கல்வியாளர்களுக்குச் சுய மேம்பாட்டு தடம் உருவாக்கப்படும். இதன் மூலம், இத்துறை சார்ந்த வெவ்வேறு பிரிவினரின் தேவைகளையும் குறிக்கோள்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தனது திட்டங்களை ஆராயும் என்று கல்வியமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், கூடுதலாக பல உதவி கல்வியாளர்களை ஈர்க்கவும் கல்வியமைச்சு விரும்புகிறது. தற்போது 2,000 உதவி கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 600 பேர் கற்றல் மற்றும் நடத்தை ஆதரவில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.
சிங்கப்பூரின் ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் நிபுணத்துவம் பெற்ற இரு கல்வி உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வோர் உயர்நிலைப் பள்ளிக்கும் இத்தகைய உதவியாளர் ஒருவர் இருப்பார். அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டாக உயரும்.
இளம் பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான தேவைகள், கவனக்குறைபாடு தொடர்பான சிறப்புத் தேவைகள் போன்ற வெவ்வேறு நிபுணத்துவங்களைக் கொண்ட பிரதான உதவி கல்வியாளர்கள் பலர் அங்கு பணிபுரிவது கல்வியமைச்சின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது.