அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் டான் யான்யிங், டான் வீ ஹாவ் ஆகிய இருவரும் தமது வழக்கைக் கையாள்வதில் முறைகேடாக நடந்துகொண்டனர் என்று முன்னாள் வீட்டுப் பணிப்பெண் திருவாட்டி பார்தி லியானி செய்த புகாரை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங்கின் வீட்டில் பணிபுரிந்த 46 வயது பார்தி மீது $34,000 திருடியதாக அக்குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கீழ்நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
உயர்நீதி மன்றத்தில் முன்னைய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கடந்த மாதம் திருவாட்டி பார்தி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கில் குறுக்கு விசாரணை செய்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தம்மை நியாயமான முறை யில் விசாரிக்கவில்லை என்று திருவாட்டி பார்தி புகார் செய்தார்
வழக்கில் முறைகேடு நடந்ததற்கான அடிப்படை இருந்ததால், புகாரை விசாரிப்பதற்குத் தலைமை நீதிபதி அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்பட்டது.