தவறான பாலியல் நடத்தைகள் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்தும் முறையில் மேலும் ஒளிவுமறைவு இல்லாத நிலையைக் கடைப்பிடிக்கப்போவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உறுதி கூறி இருக்கிறது. அந்தக் கல்லூரியில் துறைத் தலைவராக பணியாற்றிய டாக்டர் ஜெரமி ஃபெர்னாண்டோ என்பவருக்கு எதிராக கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை இந்தப் பல்கலைக்கழகம் கையாண்ட முறையில் குறைபாடுகள் இருப்பதாக பேராசிரியர் டோமி கோ நேற்று தெரிவித்தார்.
டாக்டர் ஃபெர்னாண்டோ போதித்து வந்த தெம்புசு கல்லூரியின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கோ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இனிமேல் மிகவும் ஒளிவுமறைவு இல்லாத நிலையைக் கடைப்பிடித்து குறித்த காலத்தில் தகவல்களை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஃபெர்னாண்டோ சம்பந்தப்பட்ட விவகாரம் பற்றிய புதிய தகவல்களைக் குறித்த நேரத்தில் இந்தப் பல்கலைக்கழகம் தெரியப்படுத்தவில்லை என்று ஊடகத்திடம் பேசிய அவர் கூறினார்.
சார்ஸ், கொவிட்-19 போன்ற பிரச்சினைகளை சிங்கப்பூர் அரசாங்கம் கையாண்ட விதத்தில் இருந்து இந்தப் பல்கலைக்கழகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் பேராசிரியர் டோமி கோ தெரிவித்துள்ளார்.

