மரணதண்டனையை நிறைவேற்றும் நடைமுறையில், மரண தண்டனைக் கைதிகள் சமமாக நடத்தப்படுவதில்லை என்று தனது வழக்கை வாதிடுவதற்காக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சையத் சுஹைல் சையத் ஜின் என்ற 44 வயது கைதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
தனக்குமுன் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு முன்னதாக, தனக்கு மரண தண்டனை நிறைவேற்ற சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறை எடுத்த முடிவை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சுஹைல் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது அரசியலமைப்பில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சுஹைலுக்கு முன்னதாகவே 2015ல் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தாக சுஹைலின் வழக்கறிஞர் திரு எம். ரவி மனுவில் சுட்டியிருந்தார். அதில் தட்சிணாமூர்த்தியின் கைதி எண் 944 என்றும் சுஹைலின் கைதி 949 என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, உள்துறை அமைச்சு தாக்கல் செய்த உறுதி மொழிப் பத்திரத்தில் உள்ள விவரங்களுக்கும் மனுவில் காணப்படும் விவரங்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகக் கூறியது. அதனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாகக் கூறியது.
அமைச்சு தாக்கல் செய்த மனுவில் சுஹைலின் மரண தண்டனையை 2020 செப்டம்பர் 18ஆம் தேதி நிறைவேற்றக் குறிப்பிடப்பட்டபோது, மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளிலேயே அவர்தான் முதலாமவர் என்று குறிக் கப்பட்டிருந்தது. திரு ரவி, தட்சிணாமூர்த்தியின் வழக்கை மேற்கோள்காட்டிய பின்னர், அரசு வழக் கறிஞர் பிரான்சிஸ் இங், மேலும் ஓர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளார்.