இரைப்பை சம்பந்தமான புற்றுநோயை அதன் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும் ரத்தப் பரிசோதனை முறை தற்போது சோதிக்கப்பட்டு வருவதாக தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை (என்யுஎச்எஸ்) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இரைப்பை புற்றுநோய் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 300 பேரின் உயிரைப் பறிக்கிறது. ஆண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் இரைப்பை புற்றுநோய் ஐந்தாவது இடத்திலும் பெண்களிடையே அது ஆறாவது இடத்திலும் உள்ளது.
இரைப்பைப் புற்றுநோய் முற்றிய நிலையை எட்டும்போது அது கண்டறியப்படுகிறது. இதனால் அதனைக் குணப்படுத்துவது சிரமமாகிறது.
பொதுவாக ‘எண்டோஸ்கோபி’ (Endoscopy) பரிசோதனை மூலம் அந்நோய் கண்டறியப்படுகிறது. இந்தப் பரிசோதனை முறைக்கு அதிகம் செலவாவதோடு அது உடலில் ஊடுருவும் தன்மையையும் (invasive) கொண்டது.
இந்தப் பரிசோதனை முறையில் கேமரா கருவி கொண்ட மெல்லிய குழாய், வாய் வழியாக தொண்டைக்குள் செலுத்தப்பட்டு அது வயிறு வரை இறக்கப்படுகிறது. மருத்துவக் கட்டணக் கழிவு போக, எண்டோஸ்கோபிக்கு $200 முதல் $800 வரை செலவாகும் என்று சுகாதார அமைச்சின் இணையப் பக்கம் குறிப்பிடுகிறது.
மாறாக, தற்போது சோதிக்கப்பட்டு வரும் ரத்தப் பரிசோதனைக்கு அதைவிட செலவு குறைவாகும். பொது மருத்துவமனைகளில் அதற்கு $200க்கும் குறைவாக செலவாகவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ரத்தப் பரிசோதனை உடலில் ஊடுருவும் தன்மை கொண்டதல்ல. இதனால் இரைப்பைப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய இந்தப் பரிசோதனை முறை பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண்டோஸ்கோபி மீதான சார்புநிலையையும் இது குறைக்க உதவும். ரத்தப் பரிசோதனை முடிவுகள் ஒரு வாரத்திற்குள் மருத்துவரிடம் அனுப்பி வைக்கப்படலாம். இந்தப் பரிசோதனை முறையை உருவாக்குவதற்கான முயற்சி 2012ல் தொடங்கியது.
அனைத்து இரைப்பைப் புற்றுநோய்களிலும் 87 விழுக்காட்டைத் துல்லியமாகக் கண்டறியும் ஆற்றலை ரத்தப் பரிசோதனை கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதல் கட்ட புற்றுநோய்களில் 87.5 விழுக்காட்டை அது கண்டறியும்.
எண்டோஸ்கோபி முறையைவிட ரத்தப் பரிசோதனை விலை கட்டுப்படியாக இருப்பதால், இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியமுள்ள பிரிவினரிடையே நடத்தப்படும் தேசிய அளவிலான பரிசோதனையில் ரத்தப் பரிசோதனை சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.