சர்க்கியூலர் ரோட்டில் உள்ள ‘லாஸ் அமிகோஸ்’ எனும் மெக்சிகோ உணவகம் ஒன்றில் கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் பலமுறை அத்துமீறப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்தை 20 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு, பானக் கடை ஒன்றை இத்தனை நாட்கள் மூட உத்தரவிட்டு இருப்பது இதுவே முதன்முறை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று கூறியது.
கடந்த புதன்கிழமை முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை லாஸ் அமிகோஸ் உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 10ஆம் தேதி அந்த உணவகத்தில் எட்டுப் பேர் ஒன்றுகூடியிருப்பதையும் ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளி விட்டு வாடிக்கையாளர்கள் நின்றதையும் அதிகாரிகள் கண்டனர்.
இதற்கு முன் ஜூலை மாதத்தில் அந்த உணவகம் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் அது 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டு $1,000 அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய மேலும் மூன்று உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட்சன் வாக் பகுதியில் உள்ள ‘கன்பாய் 789’ எனும் உணவகத்திற்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த ஏப்ரல் மாதத்தில் அந்தக் கடை ஊழியர்கள் சரியாக முகக்கவசம் அணியாததற்காக அந்தக் கடைக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
போட் கீ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ‘ஃபாரம் சீஃபூட் வில்லேஜ்’ உணவகம், லியாங் சியா ஸ்திரீட்டில் உள்ள ‘ஸியாங் சிக்னேச்சர்’ உணவகம் ஆகியவற்றுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐவருக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய குழுக்களை அனுமதித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அந்த உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 13 வாடிக்கையாளர்களுக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, போட் கீ பகுதியில் ஐவருக்கும் அதிகமானோர் குழுக்களாக ஒன்றுகூடியதற்காக 13 பேருக்குத் தலா $300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.