பாரந்தூக்கி ஒன்று கவிழ்ந்ததில் அதில் ஏறி பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 828க்கு அருகில் லாரி ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்த அந்த பாரந்தூக்கி நான்கு மாடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டிருந்தது. அதில் ஏறிய ஊழியர், மரத்தின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அந்தப் பாரந்தூக்கி கீழே இறக்கப்பட்டபோது, மூன்று, நான்கு மாடி உயரத்துக்கிடையே இருக்கும்போது அந்த பாரந்தூக்கி கவிழத் தொடங்கியது என நீ சூன் நகரமன்றம் நேற்று தெரிவித்தது.
அந்த பாரந்தூக்கி கீழே விழுந்தபோது அந்த ஊழியர் அதனுடன் பட்டை மூலம் பிணைக்கப்பட்டிருந்தார்.
கீழே விழுந்த அவருக்கு சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த வியாழக்கிழமை மாலை 3.55 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது.
அந்த ஊழியருக்கு உடல் நலம் சீராக இருப்பதாகவும் அவருக்கு 5 நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் நகரமன்றம் தெரிவித்தது.
ஊழியர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் எனவும் தேவைப்பட்டால் உதவி நல்கப்படும் என்றும் நகரமன்றம் தெரிவித்தது.