இயூ டீ சமூக நிலையத்தில் நடந்த வடமேற்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலைச் சந்தையில் ஐந்து நிறுவனங்கள் 450க்கும் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கின.
சில்லறை வர்த்தகம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, தளவாடப் போக்குவரத்து ஆகிய துறைகளில் வேலைகளில் சேர அந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தன.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் நான்கு வேலைச் சந்தைகளை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதில் முதலாவது சந்தைக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 600 பேரை அந்தச் சந்தை எட்டியது.
சந்தையில் ஊழியர்களை முதலாளிகள் நேரடியாகப் பேட்டி கண்டார்கள். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை நியமனம் மற்றும் வேலை தகுதிக் கழகம் (e2i) வாழ்க்கைத்தொழில் ஆலோசனைகளை வழங்கியது. மெய்நிகர் பயிலரங்குகளும் இடம்பெற்றன.
வேலை தேடுவோருக்கு உள்ள பயிற்சி வாய்ப்புகளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தில் இடம்பெறும் பயிற்சித் திட்டங்கள் பற்றி விளக்கி வழிகாட்டப்பட்டது.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் இன்று நடைபெற்ற வேலைச் சந்தையில் கல்வி அமைச்சரும் இரண்டாவது நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.