ஹவ்காங் அவென்யூ1ல் உள்ள புளோக் 174D-ல் இப்போது வசிப்பவர்களும் முன்பு வசித்தவர்களும் காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அங்கு சிலருக்கு அந்த நோய் ஏற்பட்டதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
அந்த புளோக்கில் நான்கு வீடுகளில் வசிப்போரில் நான்கு பேருக்கு காசநோய் ஏற்பட்டதாக 2018 ஜனவரிக்கும் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இடம்பெறுகிறது.
மோல்மீன் ரோட்டில் அமைந்திருக்கும் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவில் அக்டோபர் 26 முதல் இலவசமாக அந்தச் சோதனை நடத்தப்படும்.
இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவருக்கு சிகிச்சை முற்றிலும் முடிந்துவிட்டது. இதர இரண்டு பேருக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இனி தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காசநோய் ஏற்பட்டுள்ளோருக்குச் சிகிச்சை தொடங்கிவிட்டால் அவர்களிடம் இருந்து வேறு யாருக்கும் கிருமி பரவாது. ஆகையால் அந்த நால்வருக்கும் இந்த நோய் ஏற்பட்டதால் பொதுமக்களுக்குச் சுகாதார ஆபத்து ஏற்படும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அமைச்சு விளக்கியது.
முன்னெச்சரிக்கை உத்தியின் ஒரு பகுதியாக அந்த நால்வருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பது கண்டறியப்பட்டு பரிசோதனைக்காக அவர்களுடன் தொடர்புகொள்ளப்பட்டு இருக்கிறது என்றும் அமைச்சு கூறியது.
அதிகாரிகள் அந்த புளோக்கில் உள்ள எல்லா வீடுகளுக்கும் அக்டோபர் 25 முதல் 27ஆம் தேதி வரை சென்று பரிசோதனைக்குச் செல்லுமாறு குடியிருப்பாளர்களுக்கு ஊக்கமூட்டுவார்கள்.
அந்த புளோக்கில் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வசித்து இருப்பவர்கள் பரிசோதனை செய்துகொள்ள விரும்பினால் 6248 4430 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம்.
காசநோய் என்பது அந்த தொற்று உள்ளவர்களுடன் நீண்ட காலத்திற்கு அணுக்கமாக இருப்பவர்களுக்குப் பரவக்கூடிய ஒரு நோயாகும். காசநோயாளிகள் தொடுகின்ற பொருளையோ, இடத்தையோ வேறு ஒருவர் தொடுவதன் மூலம் இந்த நோய் பரவாது என்பதை அமைச்சு சுட்டியது.