‘ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தின் கீழ் மேலும் வலிமை பெற்று எழுவதன் தொடர்பிலான கலந்துரையாடல் தொடர்’ நவம்பர் 28ஆம் தேதியன்று தமிழ்மொழியில் நடக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று அறிவித்தார்.
மாண்டரின் மொழியில் நேற்று நடந்த மெய்நிகர் கலந்துரையாடலில் சுகாதார மூத்த அமைச்சர் கோ போ கூனுடன் கலந்துகொண்டு பேசிய அவர், வரும் மாதங்களில் மேலும் பல சிங்கப்பூரர்களின் கருத்துகளைச் செவிமடுக்கும் வகையில் இக்கலந்துரையாடல் தமிழ் மொழியோடு மலாய் மொழியிலும் நடக்கும் என்று தெரிவித்தார்.
கலந்துரையாடல் ஜூன் மாதத்தில் தொடங்கி, இதுவரை 11 முறை ஆங்கில மொழியில் நடந்து வந்துள்ளது. நேற்று மாண்டரின் மொழியில் நடந்த முதலாவது நிகழ்ச்சியில் 50 பேர் கலந்துகொண்டனர்.
மின்னிலக்கமயம், தொழில்நுட்பங்களைத் தழுவுதல், சமூக ஆதரவு ஆகிய தலைப்புகள் நேற்றைய கலந்துரையாடலில் முக்கியமாகப் பேசப்பட்டன. புதிய வழக்கநிலைக்குத் திரும்பும் சிங்கப்பூர் மேலும் மீள்திறன் பெற்றதாக விளங்க, அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்குமிடையே அணுக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் வெவ்வேறு அம்சங்களின் தொடர்பில் இயங்கி வரும் பணிக்குழுக்களுடன் புத்தாக்கத் தீர்வுகளைப் பற்றி பேசி, அவற்றை உருவாக்குவதில் இணைந்து செயல்பட்டு வருவதாக திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
கொள்ளை நோய் சூழலில் மனநல விவகாரங்கள் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதைச் சுட்டிய டாக்டர் கோ, இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட ‘இளையர் மனநலக் கட்டமைப்பை’ உதாரணம் காட்டினார். இளையர்கள், மனநல நிபுணர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இளையர்களின் மனநலம் குறித்துக் கலந்துரையாட இக்கட்டமைப்பு அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு மக்களின் அக்கறைகளையும் கேள்விகளையும் அறிந்துகொண்டு பின்னர் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அமர்வுகளில் அது குறித்து பேசப்படும் என்றார் திருவாட்டி ஃபூ.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் குறைந்தது 20 கலந்துரையாடல் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை நடந்த அமர்வுகளில் 1,600க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் சமூகப் பங்காளிகள் பங்கேற்று, கொவிட்-19க்குப் பிந்தைய உலகில், நாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் வாய்ப்புகளையும் குறித்து உரையாடியுள்ளனர். நெருக்கடியிலிருந்து மேலும் வலிமை பெற்று மீண்டு வருவதற்கான தீர்வுகளையும் ஆலோசித்து உள்ளனர்.