புருணையின் இளவரசர் அப்துல் அலிம் (படம்) நேற்று முன்தினம் மரணமுற்றதை அடுத்து சிங்கப்பூர் தலைவர்கள் புருணையின் மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியாவுக்கு நேற்று இரங்கல் கடிதங்கள் அனுப்பினர்.
சுல்தான் போல்கியாவுக்கு, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அனுப்பிய இரங்கல் கடிதத்தில், இளவரசரின் இழப்பு குறித்து புருணை நாட்டு குடிமக்கள் பெரிதும் கவலைப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
"கலைகள் மீதுள்ள ஆர்வத்துக்காகவும் வசதி குறைந்தவர்கள் மீது அவர் காட்டிய கருணைக்காகவும் அவர் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்," என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.
38 வயது இளவரசர் அப்துல் அலிமின் மரணச் செய்தியை நேற்று முன்தினம் புருணையின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ டெலிவிஷன் புருணையும் போர்னியோ புல்லட்டின் செய்தித்தாளும் வெளியிட்டன.
இளவரசரின் மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. புருணை தற்போது ஏழு நாள் துக்கத்தை அனுசரிக்கிறது.
பிரதமர் லீ சியன் லூங் தமது இரங்கல் கடிதத்தில், "இளவரசர் அப்துல் அலிம் தமது கனிவான, தாராள உணர்வாலும், அறப்
பணிகளுக்கும் கல்வி தொடர்பான நிகழ்வுகளுக்கும், இளையர் விவகாரங்களில் காட்டிய கடப்பாட்டாலும் பிரபலமடைந்தார்.
"இளவரசரின் தொடக்கநிலை, உயர்நிலைக் கல்வி சிங்கப்பூரில் இடம்பெற்றது குறித்து நாங்கள் பெருமையடைகிறோம். கடந்த பல ஆண்டுகளாக அவருடன் நான் கொண்டிருந்த தொடர்புகளில், அவரது பெருங்குணத்தை நான் அறிந்துகொண்டேன். அவரது மறைவு பேரிழப்பு," என்று தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் சுல்தான் போல்கியாவுக்கு இரங்கல் கடிதம் அனுப்பினார். அதில், "தம்முடைய இரக்க குணத்தால், இளவரசர் அப்துல் அலிம் புருணை நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார்," என்று எழுதியிருந்தார்.
இளவரசர் அப்துல் அலிம் நேற்று முன்தினம் புருணை அரச மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.