- ப. பாலசுப்பிரமணியம்
வகுப்பறைக்கு அப்பால் தமிழ்மொழி வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்டுகிறது. இதை உணர்த்தும் வகையில் ‘தமிழ் சோறு போடும்’ எனும் தலைப்பில் பயிலரங்கிற்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்மொழியைக் கொண்டு படிப்படியாக தங்களது அரசாங்கப் பணிகளில் உயர்ந்த மூன்று பேச்சாளர்கள் பயிலரங்கில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களில் ஒருவர் உச்ச நீதிமன்ற இந்தியப் பிரிவின் தலைமை மொழிபெயர்ப்பாளர் திருமதி சுப்பையா ராஜேஸ்வரி. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையே திறன்மிக்க தகவல் பரிமாற்றங்களை உறுதிசெய்வது மொழிபெயர்ப்பாளர்களின் பணியாகும் என்று 49 வயது திருமதி ராஜேஸ்வரி தெரிவித்தார்.
மற்றொரு பேச்சாளரான 41 வயது திருமதி நஸ்ரத் ஹசான், அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் பொது, அனைத்துலகத் தொடர்பு பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன் தமிழ் வானொலி, ஒளிவழி செய்தியாளாராகவும் நடப்பு விவகார நிகழ்ச்சி படைப்பாளராகவும் செயல்பட்ட அனுபவம் இவருக்கு உண்டு. ஊடகத் துறையில் இருந்தபோது, ஆங்கில செய்தியாளராக செயல்பட்டால்தான் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும் என்று சிலர் கூறுவதை தாம் ஏற்கவில்லை என்றும் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது என்றும் அவர் விளக்கினார்.
பயிலரங்கில் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சின் அரசாங்கத் தொடர்புத் துறை உதவி இயக்குந ரான திரு வே. நாராயணன், வேலைக்கு அப்பால் மாணவர் பருவத்திலிருந்து தமிழ் நாடகங்களில் தமக்கு மிகுந்த ஈடுபாடு இருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.வேலை செய்ய தொடங்கியதிலிருந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு விரிவுரையாளர், நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் எனப் பல்வேறு தமிழ் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்று வருகையில் தமிழ்மொழியின் மீது அதிக பிடிமானம் வந்தது என்று குறிப்பிட்டார் 37 வயது திரு நாராயணன்.
தமிழ்மொழி தெரிந்திருப்பது ஒரு வேலைத் திறன் என்றும் எந்தப் பணிக்குச் சென்றாலும் அத் திறன் தமக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்மொழி சார்ந்த துறைகளில் சம்பளம் அதிகம் இருக்காது அல்லது முன்னேறுவது கடினம் போன்ற தவறான கருத்துகள் சிலருக்கு இருக்கக்கூடும் என்றார் அவர்.