- இந்து இளங்கோவன்
‘சப்பர்’ என்பது இரவு உணவிற்குப் பிறகு நள்ளிரவு , பின்னிரவு நேரத்தில் உண்ணும் உணவு. இதற்காகவே இளையர் கூட்டம் இரவு நேரம் உணவகங்களில் அலைமோதும். இந்த ‘சப்பர்’ உணவுக்கு பேர்போன உணவகங்களில் ஸ்ரீசன் எக்ஸ்பிரசும் ஒன்று.
சிராங்கூன் கார்டன்ஸ், புக்கிட் பாத்தோக், அங் மோ கியோ, தெம்பனிஸ் ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள கிளைகளும் இரவு 7 மணிக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் நிரம்பி காணப்படும்.
வித விதமான பரோட்டாக்கள், வித்தியாசமான குளிர்பானங்கள், தெற்கு இந்திய உணவு, வட இந்திய உணவு, பிரசித்தி பெற்ற உள்ளூர் உணவு வகைகள், மேற்கத்திய உணவு என வாடிக்கையாளர்களைச் சுண்டியிழுக்கிறது இந்த உணவகம்.
இந்த உணவகத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2012ஆம் ஆண்டில் தொடங்கி படிப்படியாக விரிவுபடுத்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான உணவகமாக தடம் பதித்துள்ளார் உணவகத்தின் உரிமையாளர் திருமதி ஜெயந்தி இளங்கோவன், 34.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான இவருக்கு இவர் நடத்தி வரும் வர்த்தகமும் மூன்றாவது குழந்தைபோல் எனக் கூறுகிறார். இந்த வர்த்தகத்துக்கான யோசனை தோன்றியதிலிருந்து ஒவ்வொரு படியிலும் தனது புத்தாக்க சிந்தனையைக் கொண்டு உணவகத்தை மேம்படுத்தி வருகிறார். ஆரம்ப நாட்களில் ‘மைலோ டவர்’ (Milo Tower) என்ற ஒரு விதமான குளிர்பான பரிமாறுதல் முறையால் பிரபலமடைந்த ஸ்ரீசன் எக்ஸ்பிரஸ், இளைஞர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. ஓர் உணவகம் என்பதற்கு மேல் நண்பர்கள் சேர்ந்து ஓய்வு நேரத்தில் சந்திக்க அவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய இடமாக ஸ்ரீசன் உருவெடுக்க வேண்டும் என்பதில் திருமதி ஜெயந்தி உறுதியாக இருந்தார்.
“முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் கடைத்தொகுதிகளில் விற்கப்படும் இரு பரோராட்டாக்கள் மற்றும் கோழிக் கறிகளுக்கு $7லிருந்து $8 வரை செலுத்த தயாராக இருந்தனர். விலை குறித்து அவர்கள் எந்தவிதமான அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. ஒரு வர்த்தகத்தை நடத்தும் பொழுது விளம்பரம் மிகவும் முக்கியமான ஒன்று என அப்போது நான் புரிந்துகொண்டேன். ‘Branding’ எனும் சந்தைப்படுத்துதல் உத்தியில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். பரிமாறும் தட்டிலிருந்து உணவு
வகைப்பட்டியல், நிறுவனத்தின் அடையாளச் சின்னம் வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன். செய்யும் ஒவ்வொன்றிலும் புதுமையைப் புகுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டேன். நான் கற்றுக்கொண்ட பெரும்பாலான விஷயங்கள் எனது அனுபவங்களிலிருந்து வந்தவை. உதாரணமாக, உணவகத்தில் வேலை செய்ய தொழிலாளர்களைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்றுகூட எனக்குத் தெரியாமல் இருந்தது. நான் மனிதவள அமைச்சை தொடர்புகொண்டு நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொண்டேன். எனக்குத் தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள கூடுதல் முயற்சி எடுத்தேன். எப்போதும் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். கேள்விகள் கேட்டால்தான் கற்றுக்கொள்ள முடியும்,” என்கிறார் திருமதி ஜெயந்தி.