உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் நடந்த விபத்தின்போது வேனிலிருந்து தூக்கி வீசப்பட்ட எட்டு வயது சிறுமி தற்போது கோமாவில் இருப்பதாக அவரது தந்தை ஊடகங்களிடம் தெரிவித்தார். தமது மகளின் உடல்நலம் இனி எப்படி இருக்கப்போகிறது என்பது ஓரிரு நாட்களுக்குள் தெரிய வரும் என சிறுமியின் தந்தை 'திரு டான்' கூறியதாக உள்ளூர் சீன மொழி செய்தித்தாட்கள் குறிப்பிட்டுள்ளன.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் அவென்யு 12ல் இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நேர்ந்தது. ஒரு வேனும் சிவப்பு ஆடி காரும் ஒன்றோடு மோதிய அந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரில் அந்தச் சிறுமியும் ஒருவர். இந்தச் சம்பவம் குறித்து இரவு 8 மணி வாக்கில் தெரிவிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட எட்டு வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட வேன் பயணிகளும் அந்த வேனின் ஓட்டுநரான 56 வயது ஆடவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டிதாக அந்த வேன் ஓட்டுனர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

