முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்

2 mins read
aa7e2f91-3f73-4dd4-8ec3-98979b19fcaa
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

காற்றைத் தூய்மைப்படுத்துவது, பயணிகளைப் பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வைப்பது ஆகியவை நடைமுறைப்படுத்தப்படுவதால் கொரோனா கிருமித்தொற்று நெருக்கடி நிலையிலும் விமானங்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கிருமித்தொற்று ஏற்படும் அபாயத்தை முற்றிலும் முறியடிக்க வேண்டுமென்றால் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று அவர்கள் கூறினர்.

விமானங்களில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது மற்ற பயணியிடமிருந்து கிருமி பரவும் அபாயம் அறவே இல்லை என்று கூறிவிட முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். விமானங்களில் பயணம் செய்யும்போது கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் மிகக் குறைவு என்று விமானப் போக்குவரத்து சங்கம் இம்மாதம் தெரிவித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விமானப் பயணங்களின்போது சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் சுட்டினார்.

"விமானப் பயணங்களின்போது கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் இருப்பதைப் பயணிகள் உணர வேண்டும். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பது அவசியம்," என்றார் அவர்.

முகக்கவசம் அணிவது, சுகாதாரமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது கிருமி பரவும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் என்று பேராசிரியர் டியோ தெரிவித்தார்.

"விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது உணவு சாப்பிடுவதற்காக பயணிகள் தங்கள் முகக்கவசங்களைக் கழற்றும்போது மட்டுமே கிருமி பரவும் அபாயம் உள்ளது. ஆனால் வீட்டில் அல்லது உணவங்களுடன் ஒப்பிடும்போது கிருமி பரவும் அபாயம் குறைவாக உள்ளது. பயணிகள் ஒருவரையொருவர் பார்க்கும்படியாக அமராதது இதற்கு முக்கிய காரணம்," என்றார் அவர்.

விமானங்களின் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் நோய் நிபுணரான டாக்டர் லியோங் ஹோ நாம் தெரிவித்தார். கழிவறைகளில் உள்ள பொருட்களைத் தொடுவதற்கு முன்பு அவற்றை சுத்திகரிப்பானைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கழிவறையைப் பயன்படுத்தியதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விமானங்களில் பயணிகள் நடப்பதற்கான பாதைகளுக்கு அருகில் உள்ள இருக்கைகளில் அமர்வதைப் பயணிகள் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.