சிங்கப்பூர் நீரிணையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்திற்கும் திங்கட்கிழமை காலை நேரத்திற்கும் இடையில் கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் மூன்று கப்பல்களைக் குறிவைத்தார்கள். என்றாலும் தனித்தனியாக நிகழ்ந்த அந்தச் சம்பவங்களில் எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும் கடல் சிப்பந்திகள் யாரும் காயமடைய வில்லை என்றும் இன்று தெரிவிக்கப்பட்டது.
ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான ஆயுதம் ஏந்தி கொள்ளை மற்றும் கடற்கொள்ளை பற்றிய வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டு அமைப்பின் தகவல் பகிர்வு மையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது. புதிய கடற்கொள்ளைச் சம்பவங்களையும் சேர்த்து இந்த மாதத்தில் மொத்தம் இத்தகைய ஆறு சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இந்த ஆண்டில் வேறு எந்தவொரு மாதத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை.
சிங்கப்பூர் நீரிணையில் இந்த ஆண்டு இதுவரையில் 28 கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. சென்ற ஆண்டு முழுமையிலும் இந்த எண்ணிக்கை 31 ஆக இருந்தது.
சிங்கப்பூர் நீரிணை 105 கி.மீ. நீளமுள்ளது. ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்துக்கு வந்து செல்வதற்கான மிக முக்கிய கடல் வழியாக திகழ்கிறது. இந்த மாதத்தில் நிகழ்ந்த எல்லா சம்பவங்களிலும் கொள்ளையர்களுக்கும் கடல் சிப்பந்திகளுக்கும் இடையில் கைகலப்பு எதுவுமில்லை.
ஒரே ஒரு சம்பவத்தைத் தவிர வேறு எதிலும் பொருட்கள் திருடப்படவும் இல்லை.
ஒரு கப்பலில் இருந்து சில பற்றவைப்புக் கம்பிகளும் இதர சில பொருட்களும் திருடப்பட்டன. சிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளை அதிகரித்து இருப்பது குறித்து அந்த உடன்பாட்டு அமைப்பு கவலை தெரிவித்தது. கடல் கொள்ளைக்காரர்கள் கைது செய்யப்படவில்லை என்பதால் சிங்கப்பூர் நீரிணையில் மேலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடைசியாக நிகழ்ந்த மூன்று சம்பவங்களில் முதல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.09 மணிக்கு நிகழ்ந்தது. இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் இருந்து அந்த நாட்டைச் சேர்ந்த சீவாடான் என்ற துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த ‘சீஜெர்னி’ என்ற கப்பலைக் கொள்ளையர்கள் குறிவைத்தனர்.
ஆனால் கப்பலில் திருட்டு எதுவும் போகவில்லை. அது பற்றி சிங்கப்பூர் கடற்படையின் கடல்துறை பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழுவிடமும் சிங்கப்பூர் கரையோர போலிஸ் படையிடத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்திற்கு இரண்டு மணி நேரம் கழித்து இந்தோனீசியாவில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ‘ஏ ரேசர்’ என்ற கப்பல் மீது கொள்ளையர்கள் குறிவைத்தனர். ஆனால் எந்த பொருளும் திருட்டு போகவில்லை. யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்கு அருகே ‘இஎல் மடாட்டோர்’ என்ற கப்பலில் புகுந்த நான்கு கொள்ளையர்கள், கப்பலில் எச்சரிக்கை ஒலி ஒலித்ததை அடுத்து ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.