சிங்கப்பூர் ஈராண்டு முன்னோட்டத் திட்டம்
மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் ஈராண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்கவிருக்கிறது.
முன்னோட்டத் திட்டமாக இடம்பெறும் இந்த நடவடிக்கையின் மூலம் 100 மெகாவாட் மின்சாரம் இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இது, சிங்கப்பூரின் உச்ச அளவு மின்சாரத் தேவையில் 1.5 விழுக்காட்டை ஈடுகட்டும் எனச் சொல்லப்பட்டது.
“வட்டார நாடுகளில் இருந்து தூய எரிசக்தியைப் பெற்று, நமது எரிசக்தி மீள்திறனை மேம்படுத்த இந்த முன்னோட்ட முயற்சி உதவும். இதன் தொடர்பில் மலேசியாவுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். அவர்களின் வலுவான ஆதரவிற்கு நன்றி,” என்று சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அமைச்சர் சான் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மலேசியாவில் இருந்து மின்சாரம் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர்-மலேசியா இடையிலான கடலடிக் கம்பிவட இணைப்பின் மூலமாக மின்சார இறக்குமதி இடம்பெறும்.
மற்ற நாடுகளில் இருந்து மின்சாரம் பெறுவதற்கு இந்த முன்னோட்ட முயற்சி வழியமைத்துக் கொடுக்கும் என்று அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
உலகின் ஆக நீளமான கடலடி உயர்மின்னழுத்தக் கம்பிவடம் மூலமாக வடக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் சூரிய மின்சக்தியை வழங்கும் வகையில், இரண்டு ஆஸ்திரேலிய செல்வந்தர்கள் பல மில்லியன் டாலரை முதலீடு செய்திருப்பதாக கடந்த நவம்பரில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முயற்சிகளை சிங்கப்பூரும் முடுக்கிவிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வாக்கில் 1.5 கிகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திரு சான் குறிப்பிட்டார்.
இது சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் 2 விழுக்காட்டைப் பூர்த்தி செய்யும்.
“சூரிய சக்தியே நமக்கு மிகவும் நம்பிக்கையளிக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக இருக்கிறது. நமது மின்சார உற்பத்தியில் அதன் பங்கை நாம் அதிகப்படுத்த வேண்டும்,” என்றார் அமைச்சர் சான்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
இதனிடையே, மின்சார இறக்குமதி முன்னோட்டத் திட்டத்தின் கீழ் மலேசியாவிலுள்ள ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்தில் இருந்து மின்சாரம் பெற விரும்புவதாக எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.
“மின்சாரம் இறக்குமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் எந்த வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். மின்விநியோகத்தில் நம்பகத்தன்மை, கடந்தகாலச் செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களும் கருத்தில்கொள்ளப்படும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஈராண்டு முன்னோட்ட முயற்சிக்குப் பிறகு, மேலதிக மின்சார இறக்குமதித் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.