சிங்கப்பூரில் முதன்முதலாக அமலான புதிய முறை பிரச்சினை இன்றி சரளமாக நடந்தது
சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்கு செல்வோருக்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக புதிய முறையில் கொவிட்-19 பரிசோதனையை நடத்தும் நடைமுறை நேற்று சரளமாகத் தொடங்கியது.
அந்த முன்னோடி முறையில் ஏஆர்டி என்ற கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை பின்பற்றப்பட்டது.
ஏஆர்டி பரிசோதனை மூலம் 30 நிமிடங்களுக்குள் தொற்று பற்றிய சோதனை முடிவு தெரிந்துவிடும்.
ஒருவருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய வழக்கமாக பிசிஆர் என்ற பரிசோதனை நடத்தப் படுகிறது.
இந்த முறை ஏஆர்டி முறையை விட மிகவும் துல்லியமானது என்றாலும் பரிசோதனை முடிவு தெரிய ஒரு நாளாகும்.
சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், புதிய முறை முன்னோடி திட்டம் மூலம் பரிசோதிக்கப்படும் என்று அக்டோபர் 20ஆம் தேதி அறிவித்து இருந்தார்.
புதிய பரிசோதனை முறை வெற்றிபெற்றால் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பேரை அனுமதிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இருந்தாலும் புதிய பரிசோதனை அவ்வளவு துல்லியமாக இராது என்பதால் சமூக இடைவெளி போன்றவை தொடர்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
எரிசக்தி சந்தை ஆணையம் ஏற்பாட்டில் நேற்று சேண்ட்ஸ் காட்சிக்கூடம் மற்றும் மாநாட்டு நிலையத்தில் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரம் 2020 நிகழ்ச்சி தொடங்கியது.
காணொளி வாயிலாகவும் நேரடியாகவும் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக 250 பேரும் காணொளி மூலம் 10,000 பேரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தில் நேற்று கூட்டம் அவ்வளவாக இல்லை. டிரேஸ்டுகெதர் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி நினைவூட்டும் அறிவிப்புகள் எங்கும் இடம்பெற்றிருந்தன. அதற்கான வில்லைகளும் கொடுக்கப்பட்டது.
மாநாட்டுக்குச் சென்றவர்கள் பாதுகாப்பு நுழைவுச் சாதனத்தில் தங்களைப் பரிசோதித்துக் கொண்டனர். அவர்களின் உடல் வெப்பநிலை அளக்கப்பட்டது.
உள்ளே சென்றதும் அவர்கள் மூக்கில் இருந்து திரவம் எடுக்கப்பட்டு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்பட்டன.
அதைக் காட்டிவிட்டு அனுமதி பெற்று உள்ளே சென்றதும் பாதுகாப்பு இடைவெளி போன்றவற்றைக் கடைப்பிடித்து அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
முகக்கவசங்களையும் அணிந்து இருந்தனர். பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் அங்கிருந்து இவற்றை உறுதிப்படுத்தினர்.
பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரையில் புதிய கொவிட்-19 பரிசோதனை முறையில் எந்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியின்போது இந்தத் தொழில்துறையினர், தொழில்துறை பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் விவாதித்து பலவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள்.