சிங்கப்பூரில் ஆறு மாதங்களுக்கு முன் குறைமாதப் பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்று, ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கர்ப்பகாலம் ஏறக்குறைய 40 வாரங்கள் நீடிக்கும்.
நூர் ஸையா முகம்மது சவ்ஃபி எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை வெறும் 23 வாரம், ஆறு நாட்களில் பிறந்தது. பிறந்தபோது இதன் எடை 345 கிராம் மட்டுமே. உள்ளங்கையில் கொள்ளும் அளவுதான் இதன் உயரம் இருந்தது. ஒரு பெரியவரின் விரல் அளவுதான் இக்குழந்தையின் கை, கால் இருந்தன.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இவ்வாண்டு மார்ச் 27ஆம் தேதி இக்குழந்தை பிறந்தது. சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டம் அது.
பிறந்து ஆறு மாதங்களான நிலையில், தற்போது நூர் ஸையாவின் எடை 4.27 கிலோகிராம்.
இக்குழந்தையின் பெற்றோரான திரு முகம்மது சவ்ஃபி, 36, மற்றும் திருமதி ரொஹானி முஸ்தானி, 37, அவசரகால அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை ஈன்றெடுப்பது குறித்து இரண்டு, மூன்று மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டி இருந்தது.
வயிற்றுவலிக்காக திருமதி ரொஹானி மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுப்போம் என்று எதிர்பார்த்த இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
“எனக்குச் சாதாரண வயிற்றுவலிதான் ஏற்பட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் கொண்ட ஒருவித மருத்துவப் பிரச்சினை (pre-eclampsia) எனக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அடுத்த நாளே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார் திருமதி ரொஹானி.
ஒரு சில மாதர்களுக்குக் கர்ப்பகாலத்தின் இரண்டாவது பாதியில் pre-eclampsia எனும் மருத்துவப் பிரச்சினை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருமதி ரொஹானியின் குழந்தை உயிர் பிழைக்க 20 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக இவரிடம் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும், ஆபத்தைக் கருதி குழந்தையைப் பெற்றெடுத்து, அதற்குப் பிறகு நடப்பவற்றை இறைவனிடம் விட்டுவிட இத்தம்பதி முடிவெடுத்தனர். குழந்தை பிறந்தவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அது கொண்டுசெல்லப்பட்டது.
“குழந்தை உயிர் பிழைக்க 20 விழுக்காடு என்றாலும் அதுவும் நம்பிக்கைதானே. எது நடந்தாலும், விதிப்படியே நடக்கும். குழந்தையை ஈன்றெடுத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,” என்றார் திருமதி ரொஹானி.
நூர் ஸையா, இத்தம்பதிக்கு நான்காவது குழந்தை. இவர்களுக்கு ஏழு, நான்கு வயதில் இரு மகள்களும் ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளார்.