சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் லியூ மன் லியோங்கிடமிருந்து இழப்பீடு கோரப் போவதில்லை என்று அவரிடம் வேலை பார்த்த முன்னாள் பணிப்பெண் பார்த்தி லியானி முடிவெடுத்துள்ளார். திருவாட்டி பார்த்திக்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடுகளின் மதிப்பு சுமார் $71,000 என்று அவரின் வழக்கறிஞர் அனில் பால்சந்தனி குறிப்பிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கான சம்பளம், திருவாட்டி பார்த்திக்கு அடைக்கலம் அளித்ததால் குடியேறிகளின் பொருளியல் நிலைக்கான மனிதாபிமான அமைப்புக்கு (ஹோம்) ஏற்பட்ட செலவுகள் ஆகியவை இந்த 71,000 வெள்ளியில் அடங்கும். இருப்பினும், திருவாட்டி பார்த்தி தம் முன்னாள் முதலாளியிடம் இழப்பீடு கேட்க விரும்பவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி பார்த்தி குற்றமற்றவர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், பல நிகழ்வுகள் நடந்துவிட்டதாகக் குறிப்பிட்ட திரு அனில், திரு லியூ தம் சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் பொறுப்பிலிருந்தும் சர்பானா ஜூரோங் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகியதைக் குறிப்பிட்டார்.
அவருக்கு மேலும் பிரச்சினைகள் தர விரும்பவில்லை என்று தம் கட்சிக்காரர் கூறியிருந்ததாக திரு அனில் தெரிவித்தார்.
இருதரப்பும் சமரசப் பேச்சைக் கருதலாம் என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.