கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையிலும் உலகளாவிய தளவாட மையமாக சிங்கப்பூர் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
செயல்திறன், நம்பகத்தன்மை, மீள்திறன் ஆகிய போட்டித்தன்மை ஆற்றல்களைக் கொண்டு சிங்கப்பூர் இந்த நிலையை அடைந்திருப்பதாக அவர் கூறினார்.
நேற்று சாங்கியில் ஜெர்மானிய தளவாட நிறுவமான டிபி ஷெங்கரின் ஆலைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் திரு சான் பேசினார்.
“கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையால் உலகளாவிய நிலையில் பொருட்களுக்கான விநியோகங்கள் தடைப்பட்டுள்ளபோதிலும் சிங்கப்பூரில் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்துலக மையமாக சிங்கப்பூரின் நிலை மேம்பட்டுள்ளது.
“நமது விநியோகச் சேவையின் தரத்தைத் தக்கவைக்க நாம் எடுக்கும் முயற்சிகளால் தனித்தன்மையுடன் திகழ்கிறோம். கூடுதல் கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடு கள் போன்றவற்றை நாம் விதிக்கவில்லை,” என்றார் அமைச்சர் சான்.
“மாறாக, சிங்கப்பூரின் விநியோகக் கட்டமைப்பில் தடை ஏதும் ஏற்பட்டால் கட்டமைப்பின் பிற பகுதிகளில் உள்ள தெரிவுகளை வழங்குவதன் மூலம் நிலைமையை அரசாங்க அமைப்புகள் உடனடியாக சரிசெய்கின்றன,” என்றார் அவர்.
நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் தேவையான தீர்வு போன்ற மேம்பட்ட தளவாடச் சேவைகளை சிங்கப்பூர் வழங்குவதாக திரு சான் தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் பரப்பளவு, மற்ற நாடுகளுடனான இணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தளவாடத் துறையில் அனைத்து அம்சங்களிலும் நாம் போட்டி போடப்போவதில்லை. அதிக மதிப்புள்ள, அவசரமாகத் தேவைப்படும், நம்பகத்தன்மை அதிகம் தேவையுள்ள விநியோகங்களில் நாம் கவனம் செலுத்தப்போகிறோம்,” என்றார் திரு சான்.
பாயோ ஃபார்மா, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் போன்ற அதிக மதிப்புள்ள துறைகளை சிங்கப்பூர் ஈர்ப்பதாகக் குறிப்பிட்ட திரு சான், சிங்கப்பூர்களுக்கு இத்துறைகள் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்கும் எனக் கூறினார்.
சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய தூணாக தளவாடத் துறை விளங்குகிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது $6.8 பில்லியன் அல்லது 1.4 விழுக்காடு பங்களித்தது. சிங்கப்பூரின் தளவாடத் துறையில் 5,300க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 86,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
டிஎச்எல், யுசிஎஸ், டிபி ஷெங்கர் போன்ற முன்னிலை அனைத்துலகத் தளவாட நிறுவனங்கள் சிங்கப்பூரை அவற்றின் வட்டாரத் தலைமையகமாகக் கொண்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தளவாடத் துறையில் 1,500க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்க சிங்கப்பூரில் உள்ள பிரதான தளவாடத் துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக திரு சான் தெரிவித்தார். தளவாட மையமாக அதன் நிலையை மூன்று வழிகளில் சிங்கப்பூர் தொடர்ந்து வலிமைப்படுத்தும் என்றார் அவர்.
உலகளாவிய தளவாட நிறுவனங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் இயங்குவதை உறுதி செய்வது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது, செயல்திறனை மேம்படுத்தி ஆகப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்
படுத்துவது ஆகிய வழிகள் கடைப்பிடிக்கப்படும் என்றார் திரு சான்.