கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலை காரணமாக தேசிய சேவையாளர்களுக்கான பல பயிற்சிகளை சிங்கப்பூர் ஆயுதப் படை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில், பயிற்சிகள் படிப்படியாக மீண்டும் தொடங்குவதால் கிருமிப் பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆயுதப் படை முடுக்கிவிட்டுள்ளது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளைக் காட்டிலும் பரிசோதனை முடிவுகளை விரைவாகப் பெற முன்னோட்டச் சோதனைகளை அது நடத்தி வருகிறது.
அதன்படி, தேசிய சேவையாளர்களின் எச்சில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது.
நிறைய பேரைக் கொண்ட அமைப்புகளில் தங்கள் எச்சிலை சுயமாக சேகரித்து மருத்துவப் பரிசோதனைக்காகக் கொடுப்பது, வழக்கமான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையைப் போல அவ்வளவு அசௌகரியத்தை ஏற்படுத்தாத பரிசோதனை முறைகள் போன்றவற்றை நடத்தலாம்.
உதாரணத்துக்கு, மூக்கிற்குள் விடப்படும் கருவிகளை முழுமையாக உள்ளே விடத் தேவையில்லை. பாதி வழி மட்டும் உள்ளே விட்டால் போதும்.
இந்தப் முறைகளுடன் என்டிஜன் விரைவுச் சோதனைகளையும் ஆயுதப் படை முன்னோட்டச் சோதனையாக நடத்துகிறது.
இந்த முன்னோட்டச் சோதனை வெற்றி பெற்றால் பலர் பங்கேற்கும் நிகழ்வுகள் மீண்டும் தொடங்கும் சாத்தியம் உள்ளது.
உதாரணத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அடிப்படை ராணுவப் பயிற்சிக்கான தேர்ச்சி அணிவகுப்பு மீண்டும் தொடங்கக்கூடும்.
இந்த மாதத்திலிருந்து அனைத்து தேசிய சேவையாளர்
களுக்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்களுக்கும் அவர்கள் பயிற்சி முகாமுக்குத் திரும்பும்போது வழக்கமான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
ராணுவப் பயிற்சிகளைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க சிங்கப்பூர் ஆயுதப் படை தன்னால் ஆன அனைத்தையும் செய்வதை புதிய பரிசோதனை முறை, மாதிரிகளைச் சேகரிக்கும் முறை ஆகியவை உறுதி செய்வதாக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.
ஜூரோங் முகாமில் உள்ள காலாட்படைப் பயிற்சிக் கழகத்திற்குச் சென்று அங்குள்ள தேசிய சேவையாளர்களைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் திரு ஸாக்கி பேசினார்.
என்டிஜன் விரைவுச் சோதனைகள் முடிவுகளை விரைவாகத் தருவது மட்டுமல்லாது, வழக்கமான பரிசோதனையைவிட அது மலிவானது, செயல்படுத்துவதற்கு எளிதானது.
இருப்பினும் வழக்கமான பிசிஆர் பரிசோதனை முறை துல்லியமானது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏறத்தாழ 300 முழுநேர தேசிய சேவையாளர்களும் ராணுவ வீரர்களும் என்டிஜன் விரைவுச் சோதனைகளைச் செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 400 பேர் எச்சில் சேகரிப்பு முன்னோட்டச் சோதனையில் பங்கேற்றுள்ளனர்.
அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், தேசிய சேவையாளர்கள் தங்கள் எச்சிலைச் சேகரித்துத் தருகின்றனர்.
பரிசோதனைக்குக் குறைந்தது 2 மில்லிலிட்டர் எச்சில் தேவை.