முதலாளியின் 16 மாதக் குழந்தையின் கையை வேண்டுமென்றே ஒரு பாத்திரத்தில் இருந்த சுடுநீரில் விட்ட மியன்மார் நாட்டு பணிப்பெண்ணுக்கு இன்று (அக்டோபர் 28) 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு டிசம்பரில் பணிப்பெண் அந்த வீட்டில் வேலை செய்யத் தொடங்கினார்.
வீட்டு வேலைகள், சமையல், குழந்தை மற்றும் எட்டு வயது சிறுமியைப் பார்த்துக்கொள்வது அவரின் பொறுப்பு.
இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு குழந்தையைப் பார்த்துக்கொள்ளத் தெரியாத நிலையில் வேறு வீட்டுக்கு மாற பணிப்பெண் முடிவெடுத்தார்.
பணிப்பெண் முகவரிடம் சென்று விசாரித்ததில், வீடு மாறுவதற்கான செலவுகளைத் தானே ஏற்க வேண்டும் என்பதை அறிந்தார்; அதனால், தொடர்ந்து அதே வீட்டில் வேலையைத் தொடர்ந்தார்.
இவ்வாண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று பணிப்பெண் கோழிக்கறி சமைத்துக்கொண்டிருந்தபோது குழந்தை அழுதது.
குழந்தையைத் தன் கையில் தூக்கி வைத்துக்கொண்டே சமையலைத் தொடர்ந்தார் அந்த பணிப்பெண். அடுப்பில் சுடுநீர் கொண்ட பாத்திரம் இருப்பதை அறிந்திருந்தும், பாத்திரத்தில் குழந்தையின் இடது கை இரண்டு, மூன்று முறை படும்படி பணிப்பெண் ஆட்டினார்.
இந்தச் சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
குழந்தையின் இடது கையில் சற்று கடுமையான தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை உறுதிப்படுத்தியது.
குழந்தை தவறுதலாகச் சூடான பாத்திரத்தைத் தொட்டுவிட்டதாகக் கூறிய பணிப்பெண் வேலையிலிருந்து நின்றுகொள்ள விரும்புவதாகக் கூறியதால் குழந்தையின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காணொளிப் பதிவைப் பார்த்து போலிசில் புகார் செய்தனர்.

