நவம்பர் முதல் தேதியில் இருந்து சமூக மன்றங்கள் போன்ற குறிப்பிட்ட இடங்களில் சிறிய அளவிலான நேரடிக் கலைப் படைப்புகள் அரங்கேற அனுமதிக்கப்படும்.
சிறு அளவிலான இந்த நேரடிப் படைப்புகளைக் காண மக்களை ஊக்குவிக்கும் வகையில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
“வெளியே செல்லுங்கள் (பாதுகாப்பை மனதில் கொண்டுதான்!). நம் கலைஞர்களுக்கு உங்களின் முழு ஆதரவை அளியுங்கள்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“கலைகள், கலாசாரத் துறையின் உயிர்நாடி, இந்த நேரடிக் கலைப் படைப்புகள்” என்று வருணித்த அமைச்சர், கலைத்திறத்தைப் பாதுகாத்துக்கொள்ள, வாழ்வாதாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள, நேரடிக் கலைப் படைப்புகளே நிலையானதாக்கும் ஆகச் சிறந்த வழி என்றார்.
உள்ளரங்க நேரடிக் கலைப் படைப்புகள் நடந்தேற அனுமதிக்கப்படும் இடங்களின் பட்டியலை தேசிய கலைகள் மன்றம் அதன் இணையத்தளத்தில் நேற்று வெளியிட்டது.
அனுமதி பெற்றுள்ள இடங்கள்
மேடைக் கலை அரங்கங்கள், கலைக் காட்சியகங்கள், ஒரு சில அரும்பொருளகங்கள், சமூக மன்றங்கள், ஹோட்டல் நடனக்கூடங்கள், நிகழ்ச்சி அறைகள் ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இசைக் குழுக்கள், பாடகர் குழுக்கள், நடனக் குழுக்கள் போன்ற கலை, கலாசார அமைப்புகளும் தங்களின் வளாகத்தில் நேரடிக் கலைப் படைப்புகளை ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
செப்டம்பர் 11 முதல் நேரடிக் கலைப் படைப்புகளின் முன்னோட்டத் திட்டம் வெற்றிகரமாக நடந்ததை அடுத்து நேற்று இந்த அறிவிப்பு வந்தது.
பாதுகாப்பு அம்சங்கள்
நேரடிக் கலைப் படைப்புகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், கலைஞர்கள், பார்வையாளர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமைச்சர் டோங் தெரிவித்தார்.
இரு பகுதிகளில் அமைந்தவாறு 50 பார்வையாளர்கள் வரை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாட்டாளர்களை அனுமதிக்கலாம். அதே சமயம் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடப்பில் இருப்பது அவசியம்.
பார்வையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே மூன்று மீட்டர் பாதுகாப்பு இடைவெளி இருப்பதுடன், கலைஞர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
மேடையிலும் மேடைக்குப் பின்புறத்திலும் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 30 கலைஞர்களும் குழு உறுப்பினர்களும் இருக்கலாம். ஆனால் பத்துப் பேர் வரை மட்டுமே முகக் கவசம் அணியாமல் இருக்க முடியும்.
‘டிரேஸ்டுகெதர்’ பயன்பாடு
நேரடிக் கலைப் படைப்புகளைக் காண வருவோர், நவம்பர் 24ஆம் தேதி முதல் ‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது கருவி மூலம் தங்களின் ‘சேஃப்எண்ட்ரி’ வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ‘டிரேஸ்டுகெதர்’ வருகைப் பதிவு முறை மூலம் தொடர்புகளின் தடங்களை அறிவதற்குச் சுலபமாக இருக்கும் என்றும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தேசிய கலைகள் மன்றம் தெரிவித்தது.
இருப்பினும், உணவு பானக் கடைகள், திருமண விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் நேரடிக் கலைப் படைப்புகள் இடம்பெற முடியாது. முகக்கவசமின்றி மக்கள் கலந்து பேசும் சாத்தியம் இச்சூழல்களில் அதிகம் உள்ளதால் இக்கட்டுப்பாடு தொடர்வதாக மன்றம் தெரிவித்தது.