நல்ல வழிகாட்டியாக இருந்து அறிவுரை சொல்வதாக ஒரு சிறுவனின் தந்தைக்கு உறுதியளித்து, பின்னர் அச்சிறுவனை இரண்டு முறை மானபங்கம் செய்த 25 வயது ஆடவருக்கு நேற்று ஈராண்டு சிறைத் தண்டனை, ஐந்து பிரம்படிகள், $2,500 அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டன.
ஒரு நண்பர் மூலம் அந்த 13 வயது சிறுவனுக்கும் ஆடவருக்கும் பழக்கம் ஏற்பட, தன்னுடன் இரவுநேரத்தில் மீன்பிடிக்க வருமாறு ஆடவர் சிறுவனை அழைத்தார்.
சிறுவனின் பெற்றோர் அதை அனுமதிக்கமாட்டார்கள் என்று சிறுவன் கூறியதை அடுத்து, ஆடவர் சிறுவனின் தந்தையிடம் பேசினார்.
தம் மகனின் நடத்தை குறித்து சில பிரச்சினைகள் உள்ளதாக அந்தத் தந்தை ஆடவரிடம் தெரிவிக்க, தான் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து அறிவுரை கூறுவதாக ஆடவர் நம்பிக்கை அளித்தார்.
மீன்பிடிக்கச் சென்றது முதல் இருவரும் தொடர்ந்து ஒன்றாக நேரத்தைக் கழிக்கத் தொடங்கினர்.
அப்படி ஒரு நாள் இரவு ஆடவரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை ஆடவர் மானபங்கம் செய்தார்.
அதிர்ச்சி, பயம், குழப்பம் ஏற்பட்ட நிலையில் சிறுவன் பேசாமல் தூங்குவது போல் நடித்ததாகக் கூறப்பட்டது.
தன் வீட்டில் சிறுவன் மறுநாளும் தங்க முடியுமா என்று ஆடவர் சிறுவனின் தாயாரிடம் அனுமதி கேட்டபோது, தம் மகனுக்கு ஆடவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் என்று நம்பி தாயாரும் இசைந்தார். மறுபடியும் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை ஆடவர் மானபங்கம் செய்தார்.
அப்போதும் சிறுவன் தூங்குவது போல் பாவனை செய்து பின்னர் கழிவறைக்குச் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தன் இரு நண்பர்களுடன் ஆடவரைச் சந்தித்து அவரைக் கண்டித்தபோது ஆடவர் மன்னிப்பு கோரினார்.
அதன் பிறகு, நடந்ததைப் பற்றி சிறுவன் தன் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து போலிஸ் புகார் செய்யப்பட்டது.
ஆடவர் $10,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் டிசம்பர் 7ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைந்து தன் தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.