பணியின்போது துன்புறுத்தலுக்கு ஆளாகும் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், துன்புறுத்துவோருக்கு எதிராக சிவில் நடவடிக்கைகளைத் தொடர விரும்பினால், தொழிற்சங்கத்திடமிருந்தும் அவர்களது முதலாளிகளிடமிருந்தும் சட்ட ஆதரவைப் பெறுவார்கள்.
அத்தகைய ஊழியர்களுக்குத் தேவைப்படும் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதரவையும் வழங்க, சிங்கப்பூரில் செயல்படும் நான்கு பொதுப் போக்குவரத்து நடத்துநர்கள், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் (என்.டி.டபிள்யு.யு) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.
கொவிட்-19 தொற்றுநோய் சூழலில் முகக்கவச விதிமுறைகள் குறித்து பயணிகளுடன் ஏற்படும் சர்ச்சைகளால், சிங்கப்பூரின் பேருந்து ஓட்டுநர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் சட்ட நடவடிக்கைக்கு தொழிற்சங்கமும் அவர்களின் முதலாளிகளும் ஆதரவளிப்பார்கள் என்பதற்கு முன்னர் எந்த உத்தரவாதமும் இல்லை.
தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் திரு மெல்வின் யோங், புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் மூலம், ஊழியர்களுக்கு இந்த உத்தரவாதம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
“இதுபோன்ற தவறான செயல்கள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்ற கடுமையான செய்தியை அனுப்ப விரும்புகிறோம். கடமையில் இருக்கும் பொதுப் போக்குவரத்து ஊழியருக்கு எதிரான ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு போலிஸ் புகார் அளிக்கப்படும்,” என்று ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு யோங் கூறினார்.
எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட், சிங்கப்பூர் டவர் டிரான்சிட், கோ-அஹெட் சிங்கப்பூர், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம். நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை ஒரு மாத காலத்துக்கு நடத்திய விவாதங்களின் விளைவாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநரின் இருக்கையைச் சுற்றி பிளாஸ்டிக் திரை அமைப்பது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஊழியர் சங்கம் ஆலோசித்து வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
“இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சம்பவங்களில் எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாயுள்ளனர். இதில் பாதி முகக்கவசம் தொடர்பானது,” என்று இந்த மாத தொடக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு முழுவதும் இத்தகைய சம்பவங்கள் 33தான் இடம்பெற்றன.