அதிகமானவர்கள் மிக எளிதாக மூச்சுக்காற்றின் மூலம் கொவிட்-19 கிருமி சோதனையை செய்துகொள்வதுடன், ஒரு நிமிடத்திற்குள் அதன் முடிவுகளை அறிந்துகொள்வது சிங்கப்பூரில் விரைவில் சாத்தியமாகலாம்.
மூச்சுக்காற்றைக் கொண்டு கிருமியைக் கண்டறியும் கருவியை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ‘பிரெத்தோனிக்ஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னோட்டச் சோதனைகளில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, வரும் மாதங்களில் பொது இடங்களில் சோதனையை மேற்கொள்வது குறித்து தற்போது சுகாதார அமைச்சுடன் பேச்சு நடத்தி வருவதாக அந்த நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது.
தற்போது 180 நோயாளிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் மேலும் 250 நோயாளிகளிடம் சோதனை நடத்துவது குறித்து தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்துடன் பேசி வருவதாக பிரெத்தோனிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டாக்டர் ஜியா ஸுனன் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதார அறிவியல் ஆணையத்தின் அனுமதியைத் தொடர்ந்து, மாநாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பெரிய நிகழ்வுகளில் சோதனையை மேற்கொள்ள சிங்கப்பூரின் முக்கிய விருந்தினர் வரவேற்பு நிறுவனம் ஒன்றுடன் பேசி வருவதாகவும் நிறுவனத்தின் தலைவரான இணை பேராசிரியர் நியோ கொக் பெங் கூறினார்.
எனினும், எந்த நிறுவனம் என அவர் குறிப்பிடவில்லை. இந்தச் சோதனைக்கு, ஒருவர் தமது மூச்சுக்காற்றை ஒரு குழாய்க்குள் செலுத்த வேண்டும்.
நோயாளி ஒருவரின் மூச்சுக்காற்றில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை இந்தப் பரிசோதனைத் தொகுப்பு பதிவு செய்கிறது.
ஒவ்வொரு முறையும் மூச்சை வெளியில் விடும்போது அதில் கண்ணுக்குத் தெரியாத எளிதில் ஆவியாகக்கூடிய வேதிப்பொருள்கள் (விஓசி) இருக்கும். மனித செல்களில் நடைபெறும் பல்வேறு உயிர்வேதி வினைகளின்போது அவை உருவாக்கப்படும்.
நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரின் ‘விஓசி’ பதிவும் நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவரின் ‘விஓசி’ பதிவும் வெவ்வேறாக இருக்கும். இதனடிப்படையில், கொரோனா தொற்று போன்ற நோய்களால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா எனக் கண்டறிந்து விடலாம்.
‘பிரெத்தோனிக்ஸ்’ சோதனையில் விரைவாகவும் முடிவை அறியலாம் என்பதுடன் இச்சோதனை செய்ய ‘பிசிஆர்’ சோதனைகளைப் போன்று சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்களும் ஆய்வகமும் தேவையில்லை. இந்தக் கருவியை இயக்க ஒரு மணி நேரப் பயிற்சி போதும். கணினியை இயக்கத் தெரிந்த எவரும் இதனை இயக்கலாம் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான திரு டு ஃபாங் கூறினார்.
முன்னோட்டச் சோதனைகளில் 90 விழுக்காட்டிற்கும் மேல் துல்லியமான முடிவுகள் கிடைத்து உள்ளன. கிருமித் தொற்றுள்ளவர்கள் 93%, நோய்த்தொற்று இல்லாதவர்கள் 95% துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளனர்.
மூச்சுக்காற்று பரிசோதனைக்கு ஆகும் செலவு சோதனைகளின் எண்ணிக்கை உட்பட பலவற்றைப் பொறுத்து அமையும். ஒரு கருவியைப் பயன்படுத்தி மாதத்திற்கு 5,000 பேர் சோதிக்கப்பட்டால், ஒவ்வொரு சோதனைக்கும் 20 அமெரிக்க டாலரே ஆகும் என்றார் பேராசிரியர் நியோ. தற்போது, இங்கே பிசிஆர் சோதனை செய்துகொள்ளும் ஒருவர் 200 வெள்ளி செலுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.