குறைந்த வருவாய் பெறுவோரின் சம்பளத்தையும் அவர்களின் நலவாழ்வையும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய முத்தரப்புப் பங்காளிகள் இணைந்து முத்தரப்புச் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளன.
தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய இக்குழுவுக்கு மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது தலைமை தாங்குவார் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங், மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ராபர்ட் யாப் ஆகியோர் குழுவுக்கு ஆலோசகர்களாகப் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலமாக குறைந்த ஊதியம் பெறுவோரின் வருவாயை உயர்த்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
2007ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து வேலைநலன் துணை வருமானத் (WIS) திட்டம் தொடர்்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் குறைந்த சம்பளம் பெறும் 400,000 பேரின் வருவாய் ஆண்டுக்கு 30% வரை அதிகரித்ததுடன் அவர்களது ஓய்வூதியத் தொகையும் கூடியது.
அத்துடன் 2007 முதல் 2019 வரையில் குறைந்த வருவாய் ஈட்டும் 890,000 பேருக்கு $6.8 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
படிப்படியான சம்பள உயர்வு முறை, சுமார் 80,000 ஊழியர்களின் மேம்பாட்டுக்கு உதவியுள்ளது.
குறைந்த ஊதியம் பெறுவோரின் நல்வாழ்வை வேலைநலன் திட்டங்கள் உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் பங்களிப்புக்கு பொதுமக்களின் நன்றியுணர்வையும் உறுதிப்படுத்த முயற்சி செய்கிறது.
குறைந்த வருமான ஊழியர்களை மேலும் மேம்படுத்த, அவர்களது சம்பளங்களை ஆய்வு செய்ய வேண்டுமென்பதை முத்தரப்புக் குழு உணர்கிறது.
குறைந்த ஊதிய ஊழியர்கள் ஏனைய சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து வலுவாக உயர்வதை உறுதிசெய்ததாக, எதிர்காலத்தில் வர்த்தகங்களும் ஊழியர்களும் விளங்க முடியும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
தொழிற்சங்கங்கள், முதலாளிகள், ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகளைச் செயற்குழு மேற்கொள்ளும். இதை முன்னிட்டு சமூகத்தினரின் கருத்துகளையும் செயற்குழு திரட்டவுள்ளது.
இச்செயற்குழு அடுத்த ஆண்டு மத்திக்குள் தனது இடைக்கால அறிக்கையை வெளியிடுவதாக இலக்கு கொண்டுள்ளது.
தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனது பணியை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.