கம்பிவடத்தின் ஒரு பகுதி எரிந்து போனதுடன் மின்சுற்றுத் தகர்ப்பான் ஒன்று பழுதடைந்தது. இதுவே அக்டோபர் 14ஆம் தேதியன்று மூன்று எம்ஆர்டி தடங்களில் பெரும் சேவைத்தடை ஏற்பட்டதற்குக் காரணமாகும்.
மூன்று மணி நேரம், 36 நிமிடம் நீடித்த சேவைத்தடை சம்பவத்தால் கிட்டத்தட்ட 123,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையம், நேற்று முன்தினம் அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளில், வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் நின்றுபோன 12 ரயில்களில் 6,500 பேர் இருந்தனர். வட்ட ரயில் பாதையில் நின்றுபோன மூன்று ரயில்களில் 275 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் எம்ஆர்டி சேவைத் தடையை மேலும் மோசமாக்கியதன் தொடர்பில் இரண்டு எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் துணை மின்நிலையத்தில் இருந்த உபகரணங்களைக் கொண்டு செய்த தவறான கணிப்பினால் வட்ட ரயில் பாதையும் அக்டோபர் 14ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டது.