சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த ஆய்வாளர்கள் இருவர், இறால் ஓடுகளைக் கொண்டு ‘பார்கின்சன்ஸ்’ நோயைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைத் தயாரிக்கும் புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.
மேலும், மரத்தூளைக் கொண்டு சத்து மருந்து தயாரிக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கழிவுப் பொருட்களில் உள்ளடங்கிய மருத்துவக் குணங்களைக் கண்டுபிடிப்பது அவர்களது நோக்கம்.
எடுத்துக்காட்டாக, காய்ந்த இறால் ஓடுகளை அரைத்து தூளாக்கி, E.coli எனப்படும் ஒருவகை பாக்டீரியாவின் உதவியுடன் அது tyrosine எனும் அமினோ அமிலமாக தயாரிக்கப்படுகிறது.
இந்த அமினோ அமிலத்தை L-dopa எனப்படும் மருந்தாக ஆய்வாளர்கள் மாற்றியுள்ளனர்.
நரம்பியல் பிரச்சினையான ‘பார்கின்சன்ஸ்’ நோயை குணப்படுத்த அது பயன்படுத்தப்படுகிறது.
மரபியல் பொறியியல் மூலம் E.coli போன்ற பாக்டீரியா மேம்படுத்தப்படுவதாக என்யுஎஸ் ரசாயன, உயிர் மூலக்கூறு பொறியியல் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஸாவ் காங் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் ஈடுபடும் இரு ஆய்வாளர்களில் அவரும் ஒருவர்.