சிறிய, நடுத்தர சட்ட நிறுவனங்களைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் அடுத்த ஆண்டு முதல் கட்டாய உறுப்பினர் கட்டணத்தை சிங்கப்பூர் சட்டக் கழகத்துக்குச் செலுத்தத் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலால் பொருளியல் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில் இளம் வழக்கறிஞர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுவதாக கழகம் நேற்று தெரிவித்தது.
சட்ட நிபுணர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த இரண்டாவது நிவாரணத் தொகுப்பின் மூலம் $1 மில்லியன் அளவிலான கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய கழகம் உறுதிபூண்டுள்ளது.
இச்சலுகையால் சுமார் 4,500 சட்ட நிபுணர்கள் பயனடைவர். இச்சலுகைக்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
2016 முதல் வழக்கறிஞர் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்களும் பத்து அல்லது அதற்குக் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் சட்ட நிறுவனத்தில் பணிபுரிவோரும் இதற்குத் தகுதிபெறுவர்.
வழக்கறிஞர்களுக்கான உறுப்பினர் கட்டணம் ஒவ்வொருவருக்கும் $128.40 முதல் $374.50 வரை வேறுபடுகிறது.
ஏப்ரல் மாதம் கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வழக்கறிஞர்களுக்கே அதிக ஆதரவு தேவைப்படுவதாக கழகத்தின் தலைமை நிர்வாகி செரின் வீ தெரிவித்தார்.
“சிரம நிலையிலிருந்து விரைவில் மீள்வோம் என்பதற்கான அறிகுறி இல்லாத நிலையில் இரண்டாம் கட்ட நிவாரணத்தை அறிவித்திருக்கிறோம்.
“முதற்கட்ட நிவாரணம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. தொடர்ந்து சவாலான காலத்தை எதிர்நோக்கி வரும் பல உறுப்பினர்களுக்கு கழகம் ஆதரவுக்கரம் நீட்டுகிறது,” என்றார் திருவாட்டி வீ.
முதற்கட்ட நிவாரண அறிவிப்பின்படி ஒவ்வோர் உறுப்பினர்களின் கணக்கிலும் $150 வரவு வைக்கப்படும்.
கழகத்தின் வெளியீடுகளை வாங்கவும் கற்றல் திட்டங்களில் சேரவும் இத்தொகையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
LawNet இணையவாசலுக்கான இரண்டு மாத அடிப்படை சந்தாத் தொகையும் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.