சிங்கப்பூரில் கடந்த 162 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ராபின்சன்ஸ் சில்லறை விற்பனைக் குழுமம், ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய இடங்களில் இருக்கும் தனது கடைசி இரு கடைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
தேவை குறைந்து வருவதன் காரணமாக, தொடர்ந்து கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நிறுவனத்தைக் கலைக்கும் முடிவை எடுத்துள்ளதாக அக்குழுமம் நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
“இம்முடிவை எடுத்துள்ளமைக்காக வருந்துகிறோம். சில்லறை விற்பனைத் துறை அண்மைக்காலமாக பல சவால்களைச் சந்தித்து வந்தபோதும், தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட ராபின்சன்ஸ் குழு முயன்று வந்தது. இணையம் வழியாகப் பொருள் வாங்குவது அதிகரித்து வரும் நிலையில், கொவிட்-19 நோய்ப் பரவலும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அதிகப்படுத்திவிட்டது,” என்று ராபின்சன்ஸ் குழுமத்தின் மூத்த பொது மேலாளர் டேனி லிம் கூறினார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த அல் ஃபத்தாயிம் குழுமம், கடந்த 2008ஆம் ஆண்டில் $600 மில்லியன் கொடுத்து ராபின்சன்ஸ் குழுமத்தின் சில்லறை விற்பனை நடவடிக்கைகளைத் தன்வசப்படுத்தியது. அதன்பின் 2016ல் சிங்கப்பூரில் உள்ள பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ராபின்சன்ஸ் கடைகளை மூடவிருப்பதாக அல் ஃபத்தாயிம் அறிவித்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நிறுவனம் விற்பனையில் சரிவைச் சந்தித்து வந்தது என்று ‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டு உள்ளது.
ராபின்சன்ஸ் கடைகளில் வேலை செய்யும் 175 பேரையும் அல் ஃபத்தாயிம் குழுமத்திற்குச் சொந்தமான ‘மார்க் & ஸ்பென்சர்’, ‘ஸாரா’ போன்ற கடைகளுக்கு மாற்றுவதற்கு முடிந்தவரை முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கு எஞ்சிஇருக்கும் இரு ராபின்சன்ஸ் கடைகளும் மூடப்படுவது, பயனீட்டாளர்களின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்களை உருமாற்றிக்கொள்வது அவசியம் என்பதற்கு ‘வலுவான அறிகுறி’யாக அமைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கோலாலம்பூரில் உள்ள இரண்டு ராபின்சன்ஸ் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.