உன்னதச் சேவை, கடப்பாடு ஆகியவற்றை அடையாளம் கண்டு 350க்கும் மேற்பட்ட சமூகப்பராமரிப்பு ஊழியர்களுக்கும் அமைப்புகளுக்கும் நேற்று மெய்நிகர் விருது வழங்கும் விழா மூலம் விருதுகள் வழங்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சமூகப் பராமரிப்பு உன்னத விருதுகள் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன.
நாளை சமூகப் பராமரிப்புத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இவ்வாண்டு விருது பெறுவோரின் பெயர்களை ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவை அறிவித்தது.
மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“இந்த ஆண்டில் இதற்கு முன்பு அனுபவிக்காத சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்நிலையில், நமது சமூகப் பராமரிப்புத் துறை தொடர்ந்து கடப்பாட்டுடனும் மீள்திறனுடனும் செயல்படுகிறது. இது மிகவும் பெருமைக்குரியது,” என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.
தங்க விருது வென்றவர்களில் ஒருவரான திருவாட்டி தியோங் ஹூன் யின்னை அமைச்சர் மேற்கோள்காட்டி பேசினார்.
திருவாட்டி தியோங் கடந்த 16 ஆண்டுகளாக குவோங் வாய் ஷியூ மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
தையல் கலையில் அதிக ஆர்வம் இருக்கும் ஒருவரிடம் தமது மருத்துவமனையில் உள்ள மூத்தோர் பராமரிப்பு மையத்தில் இருக்கும் முதியோருடன் அதைப் பகிர்ந்துகொள்ள திருவாட்டி தியோங் ஊக்குவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் அந்த மருத்துவமனையில் தையல் கலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
தங்க விருது பெற்ற 11 பேர் தலா $200, பரிசுக் கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றனர்.
348 பேர் வெள்ளி விருதைப் பெற்றனர். அவர்களுக்குத் தலா $100யும் சான்றிதழும் வழங்கப்பட்டது.