பெண் ஒருவருடைய நகைகளைக் களவாடிய குற்றத்துக்காக ஆடவருக்கு 20 மாதம், ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த 55 வயது பெண் $250,000 பெறுமானமுள்ள தமது நகைகளை அந்த ஆடவரை நம்பி ஒப்படைத்தார்.
அவற்றை விற்றுத் தரும்படி அவரிடம் அப்பெண் கேட்டுக் கொண்டார். நகைகளை விற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த சிங்கப்பூரரான 40 வயது லிம் சியூ குவான், அப்பெண்ணுக்குத் தெரியாமல் அவற்றை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
நகைக்கான பணத்தை அவர் அப்பெண்ணிடம் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அந்த நகைகள் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தமது நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு லிம்மிடம் அந்தப் பெண் பலமுறை கேட்டும் நகைகள் திரும்ப கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்று போலிசில் அவர் புகார் செய்தார்.